குன்னூரில் 2-வது சீசன் துவக்கம்… சிம்ஸ் பூங்காவில் பூத்துக் குலுங்கும் மலர்கள்..!

குன்னூர்: குன்னூர் சிம்ஸ் பூங்காவில் 2-வது சீசனுக்காக நடவு செய்யப்பட்ட 1.90 லட்சம் மலர் நாற்றுக்கள் பூத்துக் குலுங்குகின்றன.

நீலகிரி மாவட்டம் குன்னூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் தற்போது இதமான காலநிலைநிலவி வருகிறது. மேலும் சாரல் மழை பெய்து வருவதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் குன்னூரில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு படையெடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் இரண்டாம் கட்ட சீசனுக்காக கடந்த ஜூலைமாதம் குன்னூர் சிம்ஸ் பூங்காவளாகத்தை சுற்றிலும் அமெரிக்கா, ஜப்பான், பிரான்ஸ், உட்பட பல்வேறு நாடுகளை தாயகமாக கொண்ட சால்வியா, பிளாகஸ், காஸ்மாஸ், ஜின்னியா, பெகோனியா, பேன்சி, டெல்பினியம் போன்ற 75-க்கும் மேற்பட்ட ரகங்களில் 1.90 லட்சம் மலர் செடிகள் நடவு செய்து பராமரிக்கப்பட்டு வருகின்றன.

தற்போது இரண்டாம் கட்ட சீசன் தொடங்கியுள்ள நிலையில் அனைத்து செடிகளிலும் பூக்கள் பூத்துக் குலுங்க தொடங்கியுள்ளன. இரண்டாம் கட்ட சீசனுக்கு குன்னூர் வந்துள்ள ஏராளமானசுற்றுலாபயணிகள் பூங்காவைகண்டு ரசித்து வருகின்றனர் என பூங்கா ஊழியர்கள் தெரிவித்தனர்.