சென்னை மக்களுக்கு 2 நாட்களுக்கு இலவச உணவு..!

சென்னையில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வந்ததால் பெரும்பாலான மக்கள் தமிழ்நாடு அரசின் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களுக்கு அரசு சார்பில் உணவுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், இன்றும் நாளையும் சென்னை முழுவதும் இருக்கக்கூடிய அம்மா உணவகங்களில் இலவச உணவு வழங்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். கனமழை காலத்தில் சென்னை மக்கள் முழுவதும் பசியாறும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் இந்த அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அக்டோபர் 16 மற்றும் 17 ஆகிய இரண்டு நாட்கள் மூன்று வேளையும் அந்தந்த பகுதிகளில் இருக்கும் அம்மா உணவகங்களில் மக்கள் இலவசமாக உணவருந்திக் கொள்ளலாம்.

இது குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ” நேற்று அதிக அளவில் பெய்த வடகிழக்குப் பருவமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், அனைத்து நிவாரணப் பணிகளும் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தாழ்வான பகுதிகளில் வாழும் மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு, அவர்களுக்குத் தேவையான உணவு மற்றும் இதர உதவிகள் பெருநகர சென்னை மாநகராட்சியால் வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், சென்னை மாநகரத்தின் மற்ற பகுதிகளில் வாழக்கூடிய ஏழை – எளிய மக்கள் உணவு அருந்தக்கூடிய அம்மா உணவகங்களிலும், இன்றும் நாளையும் இலவசமாக உணவு வழங்கப்படும்.” என அறிவித்துள்ளார்.

இதுதவிர, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மூன்று மாவட்டங்களிலும் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு திமுக மற்றும் அரசு சார்பில் இலவச உணவுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இப்போது அதி கனமழை எச்சரிக்கை நீங்கியிருந்தாலும் இன்று இரவு கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதனால் மக்கள் நிவாரண முகாம்களிலேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். நாளை வங்க கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் முழுமையாக கரையை கடந்த பின்னர் மக்கள் தங்களின் இயல்பு வாழ்க்கை திரும்பலாம் என்றும் அரசு சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

வங்க கடலில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தெற்கு ஆந்திராவின் ராயல்சீமா பகுதியை நோக்கி நகர்ந்துவிட்டது. இதனால், சென்னை இருந்த அதி கனமழை எச்சரிக்கை நீங்கியுள்ளது. இருப்பினும், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மூன்று மாவட்டங்களிலும் நாளை காலை 10 மணி வரை மழை வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கிறது. தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், சென்னைக்கு பெரு மழை இருக்காது, சீரான மழையே இருக்கும் என்றும் கூறியுள்ளார். மக்கள் அச்சப்படும் அளவுக்கான ஆபத்து இனி மழையால் இல்லை என்றும் சென்னை மக்களுக்கான குட்நியூஸை கூறியுள்ளார்.