கோவை நீதிமன்ற வளாகத்தில் பெண் போலீஸ் இன்ஸ்பெக்டரின் ஜீப் கண்ணாடி உடைப்பு – பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய போதை ஆசாமி கைது..!

கோவை சிங்காநல்லூர்காவல் நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருபவர் மசூதா பேகம்.இவர் நீதிமன்றத்துக்கு ஒரு வழக்கு தொடர்பாக ஜீப்பில் சென்றார். அப்போது நீதிமன்ற வளாகத்தில் குடிபோதையில் ஒரு வாலிபர் சுற்றித் திரிந்தார். ஏற்கனவே சிங்கநல்லூரில் வீடு புகுந்து 12 பவுன் நகை திருட்டு வழக்கில் தேடப்படும் ஆசாமி போல இருந்ததால் அவரை பிடித்து ஜீப் டிரைவரின் பாதுகாப்பில் விட்டு விட்டு நீதிமன்றத்திற்குள் இன்ஸ்பெக்டர் மசூதா பேகம் சென்றார். ஜீப்பில் ஏறி அமர்ந்திருந்த அந்த வாலிபர் திடீரென ரகளையில் ஈடுபட்டார். தன்னை விடுவிக்குமாறு கோரி டிரைவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும் ஜீப்பின் பின்பக்க கண்ணாடியை கையால் குத்தி உடைத்தார் .இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அங்கிருந்த போலீசார் விரைந்து வந்து அந்த வாலிபரை மடக்கிப்பிடித்தனர். பின்னர் அவரை சிங்காநல்லூர் காவல் நிலையத்துக்கு கொண்டு சென்று விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் ஜீப் கண்ணாடியை உடைத்த வாலிபர் சிங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்த சக்தி காந்தி ( வயது 25) என்பது தெரிய வந்தது. அத்துடன் அவர் மீது சிங்காநல்லூர் உட்பட பல்வேறு காவல் நிலையங்களில் 13 திருட்டு வழக்குகள் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதை தொடர்ந்து சக்தி காந்தி கைது செய்யப்பட்டார். அவர் மீது போலீஸ் ஜீப் கண்ணாடியை உடைத்தது ,கொலை மிரட்டல் ஆகிய பிரிவின் கீழ் ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். நீதிமன்ற வளாகத்தில் போலீஸ் ஜீப் கண்ணாடி உடைக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.