ஓய்வு பெற்ற முதியவரிடம் ரூ.70 லட்சம் ஆன்லைன் மோசடி..!

கோவை சிங்காநல்லூர் கோத்தாரி நகரை சேர்ந்தவர் அன்புமணி ( வயது 68) தனியார் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவராவார்.இவரது செல்போன்  வாட்ஸ் அப்பில் ஒரு தகவல் வந்தது. அதில் ஒரு பிரபல நிறுவனத்தில் ஆன்லைன் பகுதி நேர வேலை இருப்பதாகவும், அதில் முதலீடு செய்தால் அதிக லாபம் சம்பாதிக்கலாம் என்று கூறப்பட்டிருந்தது. இதை நம்பிய அன்புமணி பல்வேறு தவணைகளில் வங்கிகள் மூலமாக ரூ.70 லட்சத்து 17 ஆயிரம் அனுப்பி வைத்தார். பணத்தைப் பெற்றுக் கொண்ட பிறகு எந்த தகவலும் இல்லை. அந்த செல்போன் எண்ணில் தொடர்பு கொள்ளவும் முடியவில்லை. இந்த நிலையில் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அன்புமணி சைபர் கிரைம் போலீசில் புகார் செய்துள்ளார். இன்ஸ்பெக்டர் அருண் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.