பெண்களை வீடியோ எடுத்த கோவை போக்குவரத்து போலீஸ் மீது கமிஷனர் நடவடிக்கை..!

கோவை சாய்பாபா காலனி பஸ் நிறுத்தம் அருகே போக்குவரத்து போலீஸ்காரர் பாலமுருகன் என்பவர் சாதாரண உடையில் நின்று கொண்டு, அந்த வழியாக சென்ற பெண்களை செல்போன் மூலம் வீடியோ எடுத்துள்ளார். இதனை கண்ட பொதுமக்கள் சந்தேகம் அடைந்து, பாலமுருகனிடம் கேட்டபோது முன்னுக்குபின் முரணாக பேசியுள்ளார். எடுத்த வீடியோவை காண்பிக்குமாறு பொதுமக்கள் கேட்டபோது, செல்போனை கொடுக்காமல் கீழே போட்டு உடைத்துள்ளார். எனவே அவரை பிடித்து சாய்பாபா காலனி போலீசில் ஒப்படைத்தனர். சாய்பாபாகாலனி போலீசார் செல்போனை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் இதுகுறித்து போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணனிடமும் புகார் செய்யப்பட்டது. போக்குவரத்து போலீஸ்காரர் பாலமுருகனை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றி உத்தரவிட்டதுடன், செல்போனில் பதிவு செய்த வீடியோவை கைப்பற்றி அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கவும் போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டுள்ளார்.