ரஷ்ய அதிபரின் அழைப்பை ஏற்று பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்கிறார் பிரதமர் மோடி..!

புதுடெல்லி:பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய 5 நாடுகளின் குழுவானது ‘பிரிக்ஸ்’ என்று அழைக்கப்படுகிறது.

இந்த சங்கத்தின் மாநாடு ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது.

அந்த வகையில் 2024-ம் ஆண்டுக்கான பிரிக்ஸ் அமைப்பின் 16-வது உச்சி மாநாடு ரஷ்யா தலைமையில் நடைபெற உள்ளது.ரஷ்யாவின் கசான் பகுதியில் வரும் 22 மற்றும் 23-ம் தேதிகளில் நடைபெற உள்ள பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு ரஷ்ய அதிபர் புதின் அழைப்பு விடுத்துள்ளார்.

இந்நிலையில் இந்த அழைப்பை ஏற்று பிரதமர் மோடி ரஷ்யா செல்ல உள்ளார்.பிரதமர் மோடி தனது பயணத்தின் போது, ​​பிரிக்ஸ் உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் மற்றும் பல்வேறு நாடுகளின் தலைவர்களுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், 16-வது பிரிக்ஸ் உச்சி மாநாடு ‘உலகளாவிய வளர்ச்சி மற்றும் பாதுகாப்பிற்கான பன்முகத்தன்மையை வலுப்படுத்துதல்’ என்ற தலைப்பில் நடைபெறவுள்ளது.

பிரிக்ஸ் அமைப்பினால் இதுவரை செயல்படுத்தப்பட்ட முயற்சிகளின் தற்போதைய நிலை மற்றும் எதிர்கால ஒத்துழைப்புக்கான சாத்தியக்கூறுகள் குறித்து மாநாட்டில் விவாதிக்கப்படும் என்று மத்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் உலக சமூகத்தை பாதிக்கும் முக்கிய பிரச்சனைகள் விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.இதற்கிடையில், உக்ரைனுடனான நீண்டகால போரை முடிவுக்கு கொண்டுவர பிரதமர் மோடி ரஷ்ய அதிபர் புதினிடம் வலியுறுத்துவார்.

முன்னதாக, 2023-ம் ஆண்டுக்கான 15-வது உச்சி மாநாடு தென்னாப்பிரிக்காவின் தலைநகர் ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெற்றது.