மூதாட்டியை கட்டி போட்டு கொலை – நகை, பணம் கொள்ளை..!

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள காரணம்பேட்டையை சேர்ந்தவர் சுப்பையன். இவரது மனைவி கண்ணம்மாள் ( வயது 70 ) கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு கணவர் இறந்து விட்டார். இவர்களது மகன்கள் மற்றும் மகள் ஆகியோர் திருமணமாகி தனியாக வசித்து வருகிறார்கள். இதனால் கண்ணம்மாள் மட்டும் தனியாக வசித்து வந்தார். இந்த நிலையில் நேற்று காலை நீண்ட நேரம் ஆகியும் அவரது வீட்டின் கதவு திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் வீட்டிற்கு சென்று பார்த்தனர். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு கிடந்ததுடன் கண்ணம்மாள் கை – கால்கள் கட்டப்பட்ட நிலையில் இறந்து கிடந்தார் . இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் பல்லடம் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினார்கள். பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் கண்ணம்மாள் தனியாக வசிப்பதை நோட்டமிட்ட மர்மக் கும்பல் இரவு நேரத்தில் வீட்டிற்குள் புகுந்து அவரின் கை – கால்களை கட்டி போட்டுள்ளனர். மேலும் அவர் சத்தம் போடாமல் இருக்க வாயில் துணியை திணித்து கட்டி உள்ளனர். இதனால் அவர் மூச்சு திணறி இறந்திருக்கலாம். அதன் பின்னர் பீரோவை திறந்து அதில் இருந்த நகைகள் -பணத்தை கொள்ளையடித்து சென்று உள்ளனர். மேலும் கண்ணம்மாள் 8 பவுன் தங்கச் செயின், 4 பவுன் வளையல்கள் அணிந்திருந்தார். அவைகளும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. இந்த வழக்கில் கொள்ளையர்களை பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது . மூதாட்டியை கொலை செய்து நகை – பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது..