திருப்பத்தூரில் காவல் கண்காணிப்பாளர் ஷ்ரேயா குப்தா தலைமையில் காவலர் வீரவணக்க நாள் அனுசரிப்பு..!

காவலர் வீர வணக்க நாளை முன்னிட்டு திருப்பத்தூர் மாவட்டம் பாச்சல் ஆயுதப்படை மைதானத்தில் நினைவு சின்னம் அமைக்கபபட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்ரேயா குப்தா,இ.கா.ப., தலைமையில் காவலர் வீரவணக்க நாள் அனுசரிக்கப்பட்டது.

1959ம் ஆண்டு அக்டோபர் 21ம் தேதியன்று லடாக் பகுதியில் “ஹாட் ஸ்பிரிங்” என்ற இடத்தில் சீன ராணுவத்தினர் மேற்கொண்ட திடீர் தாக்குதலில் மத்திய பாதுகாப்பு படை காவலர்கள் 10 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து இந்தியா முழுவதும் பல்வேறு சம்பவங்களில், பணியின்போது வீர மரணமடைந்த காவலர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 21-ஆம் நாள் காவலர் வீரவணக்க நாளாக நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது.

அதன்படி இன்று (21.10.2024) திருப்பத்தூர் மாவட்டம் பாச்சல் ஆயுதப்படை மைதானத்தில் காவலர் நினைவுச் சின்னம் அமைத்து “காவலர் வீர வணக்க நாள்” மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்ரேயா குப்தா,இ.கா.ப., தலைமையில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்நிகழ்வில் திருப்பத்தூர் உட்கோட்டம் துணை கண்காணிப்பாளர்கள் ஜெகநாதன், மாவட்ட குற்றப்பிரிவு துணை கண்காணிப்பாளர்கள் சுரேஷ், உட்பட காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் தங்கள் சீருடைகளில் கருப்பு ரிப்பன் அணிந்து மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்கள்.

நிகழ்ச்சியின் போது உரையாற்றிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் கடந்த ஆண்டில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் பணியின் போது உயிர் நீத்த காவல்துறையினரின் பெயர்களை நினைவு கூர்ந்தார்.

பின்னர் 63 துப்பாக்கி குண்டுகள் முழங்க வீர மரணம் அடைந்த காவல்துறையினருக்கு மரியாதை செலுத்தப்பட்டது.