குடிபோதையில் டாஸ்மாக் கடையில் தகராறு … வாலிபரின் காதை கத்தியால் அறுத்து வீசிய தொழிலாளி கைது..!

தேனி மாவட்டம் வருசநாட்டை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (வயது 35 ) கூலி தொழிலாளி. இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். இவர் கோவை அருகே உள்ள மாதம் பட்டியில் தங்கியிருந்து கூலி வேலை செய்து வருகிறார். திண்டுக்கல் மாவட்டம் மஞ்சம்பட்டியை சேர்ந்தவர் பிரபாகரன் ( வயது 27) இவரும் அதே பகுதியில் தங்கி இருந்து கூலிவேலை செய்து வருகிறார். நேற்று மாலை பிரபாகரன் அந்த பகுதியில் உள்ள ஒரு டாஸ்மாக் கடைக்கு சென்று மது பாட்டில்கள் வாங்கிக் கொண்டு அங்குள்ள ஒரு பகுதியில் அமர்ந்து மது அருந்தி கொண்டிருந்தார். இந்த நிலையில் அங்கு மது குடிக்க வந்த ஜெயராமன் என்பவர் அளவுக்கு அதிகமாக மது குடித்து மயங்கி கிடந்தார். இதை பார்த்த ராமச்சந்திரன் அங்கிருந்த சிலருடன் சேர்ந்து கீழே விழுந்து கிடந்த ஜெயராமனை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார்.. அப்போது மது அருந்தி கொண்டிருந்த பிரபாகரன் போதை தலைக்கேறிய நிலையில் ராமச்சந்திரன் தான் ஜெயராமனை தாக்கி கீழே தள்ளிவிட்டதாக தவறாக நினைத்து ராமச்சந்திரனை சரமாரியாக தாக்கி கன்னத்தில் அறைந்தார். இதனால் அதிர்ச்சியில் உறைந்து போன ராமச்சந்திரன் போதையால் எதுவும் சொல்லாமல் அங்கிருந்து நகர்ந்து சென்று விட்டார். இருந்தாலும் வீண் பழி சுமத்தப்பட்டதால் அவர் ஆத்திரம் அடங்கவில்லை. அங்கிருந்து வீட்டுக்கு சென்று காய்கறி வெட்டுவதற்கு பயன்படுத்தும் கத்தியை எடுத்துக் கொண்டு மீண்டும் மது கடைக்குச் சென்றார். பிரபாகரனை தேடினார். அப்போது அதே இடத்தில் மது அருந்தி கொண்டிருந்த பிரபாகரனிடம் சென்று தகராறு செய்தார் . பின்னர் அவர் காதை கத்தியால் அறுத்து வீசினார்.படுகாயம் அடைந்த பிரபாகரனை துண்டிக்கப்பட்டு காதுடன் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து பேரூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார்கள் . இது தொடர்பாக ராமச்சந்திரனை போலீசார் கைது செய்தனர் .பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜாப்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்..