உச்சகட்ட போர் பதற்றம்… ஈரான் மீது வான்வெளி தாக்குதல்… அச்சத்தில் உறைந்துள்ள மக்கள்..!

ஸ்ரேல் நடத்திய தாக்குதலில் காஸாவின் ஹமாஸ் படைத் தலைவர் யாஹ்யா சின்வார் கொல்லப்பட்டார். இதனையடுத்து ஹமாஸ் அமைப்பினர் போரை விட்டுவிட்டு தங்கள் நாட்டு பிணயக் கைதிகளை ஒப்படைக்க வேண்டும் என இஸ்ரேல் கூறியிருந்தது.

அதேபோல், போரை நிறுத்த ஹமாஸ் அமைப்பினரும் சில நிபந்தனைகளை விதித்திருந்தனர். இதனால் இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போர் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தற்போது இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுக்கு மரண பயத்தை காட்டும் விதமாக, அவரது இல்லம் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தி அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ளது லெபனான்.

ஹிஸ்புல்லாவின் தலைவரான ஹசன் நஸ்ரல்லா சில வாரங்களுக்கு முன் இஸ்ரேல் நடத்திய வான்வெளி தாக்குதலில் கொல்லப்பட்டார். இதற்கு பதிலடி கொடுக்க ஈரான் நேரடியாக இஸ்ரேல் மீது கடந்த 1ம் தேதி ஏவுகனை தாக்குதல் நடத்தியது. இதனைத் தொடர்ந்து ஹமாஸ் படைத் தலைவர் யஹ்யா சின்வார் தங்கியிருந்த கட்டடம் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இருதினங்களுக்கு முன் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் யஹ்யா சின்வார் உயிரிழந்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவின் சொகுசு பங்களா மீது லெபனான் ட்ரோன் தாக்குதல் நடத்தியது. இதில் உயிர் சேதாரம் ஏதும் ஏற்படவில்லை என்றாலும் சொகுசு பங்களாவின் ஒரு பகுதி உடைந்து சுக்குநூறாகியது.

இதனால் கோபத்தின் உச்சிக்கு சென்ற இஸ்ரேல் ஈரான் மீது இன்று (அக். 26) அதிகாலை வான்வெளி தாக்குதலை தொடங்கியது. ஈரான் தலைநகர் டெக்ரான் மற்றும் அதன் அருகே உள்ள கராஜ் நகரங்களை குறிவைத்து இஸ்ரேல் சரமாரியாக ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதனால் ஈரானில் பெரும் போர் பதற்றம் நிலவியுள்ளது. ஈரான் தலைநகரான தெஹ்ரானில், வெடிப்புகளின் சத்தம் கேட்டதாகத் தெரிவித்த அந்நாட்டு ஊடகங்கள், நகரத்தைச் சுற்றியுள்ள வான் பாதுகாப்பு அமைப்புகளிலிருந்து ஒலிகள் வந்ததாகவும் தெரிவித்தன. எனினும், ஈரானில் ஏற்பட்டுள்ள சேதங்கள் குறித்து உடனடி தகவல் இல்லை.

இந்த நிலையில், இஸ்ரேலின் தாக்குதலைத் தொடர்ந்து ஈரானில் மறு அறிவிப்பு வரும் வரை விமானங்கள் ரத்து செய்யப்படுவதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.