கோவை அரசு மருத்துவமனையில் கழுத்தை அறுத்து நோயாளி தற்கொலை..

கோவை சீரநாயக்கன்பாளையம் ,அண்ணா நகரை சேர்ந்தவர் பன்னீர் செல்வம் ( வயது 45) கூலி தொழிலாளி. இவரது மனைவி ராணி ( வயது 40) இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர் .மகளுக்கு திருமணம் முடிந்துவிட்டது. பன்னீர்செல்வம் குடிப்பழக்கம் உடையவர். தினமும் குடித்துவிட்டு தனது மனைவிடம் தகராறு செய்து வந்தார் . இதனால் ராணி கணவரிடம் கோபித்துக் கொண்டு தூத்துக்குடியில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார் . இதனால் பன்னீர்செல்வம் தனது தாயாருடன் வசித்து வந்தார். இந்த நிலையில் அவருக்கு காச நோய் பாதிப்பு ஏற்பட்டது. இதற்காக அவர் பல இடங்களில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை. நோய் பாதிப்பு அதிகமானதால் அவர் கடந்த 3ஆம் தேதி சிங்காநல்லூர் நகர்ப்புற துணை சுகாதார மையத்தில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் காச நோய் பிரிவுவார்டில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். பன்னீர்செல்வத்தை அவரது தாயார் அருகில் இருந்து கவனித்து வந்தார். நோய் குணமடையாததாலும், மனைவி கோபித்துக் கொண்டு சென்றதாலும், வாழ்க்கையில் விரக்தி அடைந்த பன்னீர்செல்வம் கடந்த 15 ஆம் தேதி நகம் வெட்டும் கத்தியால் தனது கழுத்தை அறுத்துக் கொண்டார் .ரத்த வெள்ளத்தில் துடித்த பன்னீர் செல்வத்துக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனாலும் அவர் சிகிச்சை பலனளிக்காமல் இறந்தார். இது குறித்து ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மனைவி பிரிந்து சென்றதாலும், காசநோய் பாதிப்பு அதிகமானதாலும் யாருக்கும் பாரமாக இருக்க விரும்பாத பன்னீர்செல்வம் கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது..