கோவை மதுக்கரை அருகே சேலம் கொச்சின் சாலையில் மரப்பாலத்தில் அமைந்துள்ள ரயில்வே கீழ் பாலத்தை திரும்ப கட்டும் பணி நடைபெற உள்ளது.இதற்காக போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.இது குறித்து கோவை மாவட்ட காவல்துறையின் சார்பில் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:
சேலம் – கொச்சின் சாலையில் மரப்பாலத்தில் அமைந்துள்ள இரயில்வே கீழ் பாலத்தை திரும்பக்கட்டும் பணி நடைபெற உள்ளதால் இன்று ( 14.03.2025) முதல் கீழ்க்கண்டவாறு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சேலம் – கொச்சின் சாலை கி.மீ 170/4, மரப்பாலத்தில் அமைந்துள்ள இரயில்வே கீழ் பாலத்தை திரும்பக்கட்டும் பணி நடைபெற உள்ளதால், கோவையில் இருந்து க.கா. சாவடி, வாளையாறு மற்றும் பாலக்காடு செல்லும் கனரக மற்றும் இலகுரக வாகனங்கள் அனைத்தும் மரப்பலாம் சாலை கீழ் பாலம் வழியாக செல்ல இயலாது. மேலும் பேருந்து மற்றும் இலகுரக வாகனங்கள் மட்டும் மதுக்கரை சந்திப்பில் கி.மீ 168/4 இடது புறம் திரும்பி குவாரி ஆபீஸ் சாலை குரும்பபாளையம் சாலை மதுக்கரை மார்க்கெட் சாலை, செட்டிபாளையம் சாலை வழியாக கி.மீ 170/8 செட்டிபாளையம் பிரிவுக்கு செல்ல வேண்டும். கனரக வாகனங்கள் மேற்படி சாலையில் செல்ல அனுமதி இல்லை.
மேலும் வாளையாறு மற்றும் பாலக்காட்டிலிருந்து, கோவை, குனியமுத்தூர், உக்கடம் செல்லும் பேருந்து மற்றும் இலகுரக வாகனங்கள் மட்டும் செட்டிபாளையம் பிரிவு, விறகுக்கடை பாலம் வழியாக சென்று ஏசிசி சிமெண்ட் தொழிற்சாலை வழியாக செல்ல வேண்டும். கனரக வாகனங்கள் மேற்படி சாலையில் செல்ல அனுமதி இல்லை.
மேலும் கோவையில் இருந்து க.கா. சாவடி, வாளையாறு மற்றும் பாலக்காடு செல்லும் கனரக வாகனங்கள் ஆத்துப்பாலம் சந்திப்பில் இருந்து இடது புறம் திரும்பி குறிச்சி, ஈச்சனாரி சாலை வழியாக சென்று (என்.எச்.544) சேலம் – கொச்சின் சாலையில் கற்பகம் காலேஜ் சந்திப்பில் வலது புறம் திரும்பி செல்ல வேண்டும். மேலும் வாளையாறு மற்றும் பாலக்காட்டிலிருந்து என் எச்.544 ல் கோவைக்கு வரும் கனரக வாகனங்கள் கற்பகம் காலேஜ் பொள்ளாச்சி சாலை சந்திப்பில் இடது புறம் திரும்பி என் எச்.948 ல் ஈச்சனாரி, குறிச்சி சாலை வழியாக ஆத்துபாலம் சந்திப்புக்கு செல்ல வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கோவை மதுக்கரை மரப்பாலத்தில் ரயில்வே கீழ் பாலம் கட்டும் பணி தொடக்கம் : இன்று முதல் போக்குவரத்தில் மாற்றம்..!
