ஜார்க்கண்ட் என்கவுன்ட்டரில் 8 மாவோயிஸ்ட்கள் சுட்டுக்கொலை..!

ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தில் நேற்று நிகழ்ந்த என்கவுன்ட்டரில் 8 மாவோயிஸ்ட்கள் உயிரிழந்தனர். ஜார்க்கண்ட் மாநிலம் பொகாரோ மாவட்டம் லால்பனியா பகுதியில் உள்ள லுகு வனப்பகுதியில் மாவோயிஸ்ட் நடமாட்டம் இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து, சிஆர்பிஎப் அமைப்பின் ‘கோப்ரா’ கமாண்டோக்கள் மற்றும் மாவட்ட காவல் துறையினர் இணைந்து அப்பகுதியில் நேற்று அதிகாலையில் தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது பாதுகாப்புப் படையினர் மீது மாவோயிஸ்ட்கள் தாக்குதல் நடத்தினர். இதையடுத்து, தற்காப்புக்காக பாதுகாப்புப் படையினரும் பதில் தாக்குதல் நடத்தினர். இந்த துப்பாக்கிச் சண்டையில் 8 மாவோயிஸ்ட்கள் உயிரிழந்தனர் என காவல் துறை உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

என்கவுன்ட்டர் நடந்த இடத்திலிருந்து ஒரு ஏ.கே. ரக துப்பாக்கி, 3 ஐஎன்எஸ்ஏஎஸ் ரக துப்பாக்கிகள், ஒரு எஸ்எல்ஆர் துப்பாக்கியை பாதுகாப்புப் படையினர் கைப்பற்றி உள்ளனர். இந்த சண்டையில் பாதுகாப்புப் படையினருக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.

வரும் 2026-ம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள் மாவோயிஸ்ட் அமைப்பை முற்றிலும் ஒழித்துக்கட்ட மத்திய அரசு உறுதி பூண்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, வனப்பகுதியில் மாவோயிஸ்ட்களுக்கு எதிராக போரிடுவதற்காக சிறப்பு பயிற்சி பெற்ற ஒரு பிரிவை சிஆர்பிஎப் உருவாக்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.