அமைச்சர் பதவியா..? ஜாமினா..? இந்த இரண்டில் எது வேண்டும்..? செந்தில்பாலாஜிக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி.!!

ட்டவிரோத பணப் பரிமாற்ற தடை சட்ட வழக்கில் திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி 2023ஆம் ஆண்டு ஜூன் மாதம் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார்.

ஓராண்டுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர் ஜாமீன் கேட்டு தொடர்ந்து மனு தாக்கல் செய்து வந்தார். அவரது ஜாமீன் மனுக்கள் தொடர்ந்து நிராகரிக்கப்பட்டு வந்த நிலையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 26 ஆம் தேதி அவருக்கு நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஜாமீனில் வெளியே வந்த சில நாட்களிலேயே செப்டம்பர் 29 ஆம் தேதி அவர் அமைச்சராக மீண்டும் பதவியேற்றார். எனவே அவரது ஜாமீனை ரத்து செய்ய வலியுறுத்தி வழக்கு தொடரப்பட்டது. செந்தில் பாலாஜி அமைச்சராகி விட்டதால் அவருக்கு எதிரான வழக்கில் தைரியமாக சாட்சி சொல்வதற்கு சாட்சிகள் தயங்குகிறார்கள். எனவே, செந்தில் பாலாஜியின் ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என வித்யாகுமார் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனுவை தாக்கல் செய்தார்.

வழக்கில் எந்த சாட்சியையும் அச்சுறுத்தவில்லை. மனுதாரர் கூறும் குற்றச்சாட்டுகள் உண்மைக்கு உகந்ததல்ல என்று அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார். உச்ச நீதிமன்ற உத்தரவின் படி ஜாமின் நிபந்தனைகளை மீறவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். இந்த நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்ற வேண்டும் என்ற வேண்டுகோளை நிராகரித்தனர். செந்தில் பாலாஜிக்கு ஜாமின் வழங்கியது குறித்து விளக்கம் அளித்த நீதிபதிகள், செந்தில் பாலாஜிக்கு ஜாமின் கொடுத்த போது இருந்த சூழல் வேறு.. தற்போதைய சூழல் வேறு.. ஜாமின் கொடுக்கும் போது நீங்கள் அமைச்சர் பதவியில் இல்லை..

சிறையில் இருந்த செந்தில் பாலாஜிக்கு நன்னடத்தை அடிப்படையில் உச்ச நீதிமன்றம் ஜாமின் வழங்கவில்லை. அடிப்படை உரிமை பாதிக்கப்பட கூடாது என்ற காரணத்தில் தான் செந்தில் பாலாஜிக்கு ஜாமின் வழங்கினோம். செந்தில் பாலாஜி அமைச்சராக இல்லை என சிறப்பு மனு தாக்கல் செய்து ஜாமின் பெற்றீர்கள்.. ஆனால் பிறகு அமைச்சராக்கி கொண்டீர்கள். ஜாமின் வழங்கியபோது அமைச்சராக பதவி ஏற்க அனுமதி வழங்கவில்லை என்றும் உச்ச நீதிமன்றம் விளக்கமளித்துள்ளது.

அமைச்சராக இருந்த போது செந்தில் பாலாஜி புகார் தாரர்களுடன் செட்டில்மென்ட் செய்து கொண்டது நினைவில்லையா? என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், தற்போது அமைச்சராக இருக்கும் செந்தில் பாலாஜி சாட்சிகளை கலைக்க மாட்டார் என்பதற்கு என்ன உறுதி? சாட்சியை செந்தில் பாலாஜி கலைக்க மாட்டார் என்பதை ஏற்க முடியாது. ஜாமின் கிடைத்ததும் அமைச்சராக பதவி ஏற்றது நேர்மையான செயல் அல்ல..என தெரிவித்தனர்.

செந்தில் பாலாஜிக்கு ஜாமின் வழங்கியது நாங்கள் செய்த தவறு. இதுவே தவறான உதாரணமாகிவிட்டது என தெரிவித்த நீதிமன்றம் ஜாமின் வேண்டுமா..? அமைச்சர் பதவி வேண்டுமா..? என செந்தில் பாலாஜி வரும் திங்கள் கிழமைக்குள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என கெடு விதித்தது. உச்ச நீதிமன்றத்தில் இந்த நடவடிக்கை தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் செந்தில் பாலாஜி அமைச்சராக தொடருவாரா..? அல்லது மீண்டும் சிறைக்கு செல்வாரா..? என பரபரப்பு எழுந்துள்ளது.