தமிழக அமைச்சர் பொறுப்பில் இருந்து செந்தில் பாலாஜி ராஜினாமா செய்துள்ளார். சர்ச்சை பேச்சால், அமைச்சர் பொறுப்பிலிருந்து பொன்முடி மாற்றம் செய்யப்பட்டு, தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
தற்போதைய சூழலில் தமிழக அமைச்சர்கள் சிவசங்கர், ராஜ கண்ணப்பன், முத்துசாமி ஆகியோரிடம் மாற்றப்பட்டவர்களின் துறைகள் பிரித்து தரப்பட்டுள்ளன.
உச்சநீதிமன்றத்தின் கண்டன உத்தரவைத் தொடர்ந்து, அமைச்சர் செந்தில் பாலாஜி ராஜினாமா செய்துள்ளார். அவர் வகித்த மின்வாரியத் துறை, போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கருக்கு கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது.
அதே போல செந்தில் பாலாஜி வசம் இருந்த மற்றொரு துறையான மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை, குடியிருப்பு மற்றும் நகர் மேம்பாட்டுத் துறை அமைச்சர் முத்துச்சாமி வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் பொன்முடி வசமிருந்த வனத்துறை, பால்வளத்துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதே போல முன்பு பால்வளத்துறை அமைச்சராக இருந்து, நீக்கப்பட்ட மனோ தங்கராஜை அமைச்சரவையில் சேர்க்க, பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சரின் பரிந்துரையை ஏற்று, தமிழக அமைச்சரவைக்கான மாற்றத்திற்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார். அவருக்கு என்ன பொறுப்பு வழங்கப்படும் என்பது நாளைய பொறுப்பு ஏற்கும் போது தெரியவரும்.
அமலாக்கத்துறை வழக்கில் ஜாமின் பெற்ற செந்தில் பாலாஜி, மாறுநாளே அமைச்சராக பொறுப்பேற்றதை கண்டித்த உச்சநீதிமன்றம், அவர் பதவி விலக அவகாசம் கொடுத்தது. கடைசி வரை அவர் பதவி விலகாததால், சில நாட்களுக்கு முன் நடந்த விசாரணையில், திங்கள் கிழமை வரை அவருக்கு அவகாசம் அளித்து உத்தரவிட்டது. உச்சநீதிமன்றத்தின் கடும் எச்சரிக்கையின் அடிப்படையில் எந்த நேரத்திலும் அவர் ராஜினாமா செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நாளை அவர் தொடர்பான வழக்கு விசாரணைக்கு வருவதால், தற்போது செந்தில் பாலாஜி தன்னுடைய அமைச்சர் பதவியை ராஜினிமா செய்துள்ளார்.
மூத்த திமுக தலைவரான பொன்முடி, தொடர்ந்து சர்ச்சை கருத்துக்களை தெரிவித்து வந்த நிலையில், சமீபத்தில் விலைமாதுவுடன் ஒப்பிட்டு அவர் பேசிய கருத்துக்கள் கடும் எதிர்வினையை ஏற்படுத்தியது. மேலும், அவருடைய பேச்சை சென்னை உயர்நீதிமன்றமும் கடுமையாக கண்டித்துள்ளது. மேலும் எதிர்கட்சியான அதிமுக, பொன்முடியின் பேச்சை கண்டித்து மாவட்ட வாரியாக கண்டனம் ஆர்பாட்டங்களை நடத்தி வருகிறது. செந்தில் பாலாஜி அமைச்சர் பதவியை இழக்கும் போது, அவருடன் சேர்ந்து பொன்முடியும் பதவி இழப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. எதிர்பார்த்தது போலவே, அவர் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.