டெல்லி: மக்களுக்கு அதிகமாக கிடைப்பதற்காக ஏ.டி.எம்.களில் 100 மற்றும் 200 ரூபாய் நோட்டுகள் இருக்க வேண்டும் என்று வங்கிகளுக்கு ரிசர்வ் வாங்கி அறிவுறுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் பொதுவாக அனைத்து வங்கி ஏ.டி.எம்.களிலும் 500 ரூபாய் நோட்டுகள்தான் அதிகளவில் இருக்கும். இதன் காரணமாக ஏராளமான மக்கள் குறைவான மதிப்புடைய நோட்டுகள் பெற முடியாமல் சிரமம் அடைந்து வருகின்றன. எனவே, மக்களின் இந்த குறையை போக்குவதற்காக வங்கி ஏ.டி.எம்.களில் 100 மற்றும் 200 ரூபாய் நோட்டுகள் இருப்பதை உறுதி செய்யுமாறு வங்கிகள் மற்றும் ஏ.டி.எம். ஆபரேட்டர்களுக்கு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தி உள்ளது.
இது தொடர்பாக ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது; அடிக்கடி பயன்படுத்தும் குறைந்த மதிப்பு கொண்ட பணத்தாள்கள் மக்களுக்கு அதிகமாக கிடைக்கும் வகையில் ஏ.டி.எம்.களில் 100 மற்றும் 200 ரூபாய் நோட்டுகள் இருப்பதை வழக்கமான அடிப்படையில் உறுதி செய்ய வேண்டும். இதை படிப்படியாக அமல்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் 75 சதவீத ஏ.டி.எம்.களில் வருகிற செப்டம்பர் 30ம் தேதிக்குள் குறைந்தபட்சம் ஒரு அறையிலாவது 100 மற்றும் 200 ரூபாய் நோட்டுகள் இருப்பதை உறுதி செய்யுமாறு கூறியுள்ள ரிசர்வ் வங்கி, அனைத்து ஏ.டி.எம்.களிலும் அடுத்த ஆண்டு மார்ச் 31ம் தேதிக்குள் இந்த முறையை உறுதி செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.