பள்ளி மாணவி பாலியல் பலாத்கார வழக்கில் 75 வயது முதியவருக்கு 20 ஆண்டு சிறை..!

கோவையை சேர்ந்த ஒரு சிறுமி 7-ம் வகுப்பு படித்து வந்தார். அப்போது அவருடன் படிக்கும் மற்றொரு சிறுமியுடன் பழகினார் .அந்த சிறுமியின் வீட்டுக்குச் சென்ற போது அங்கிருந்த 75 வயது முதியவர் அல்போன்ஸ் என்பவர் அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும் இதனை வெளியே சொன்னால் பெற்றோரை கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியுள்ளார். இதனால் அச்சம் அடைந்த அந்த சிறுமி பெற்றோரிடம் கூறவில்லை. தொடர்ந்து முதியவரின் பாலியல் தொந்தரவு தாங்க முடியாமல் சிறுமி பெற்றோரிடம் கூறி கதறி அழுதார். இந்த சம்பவம் கடந்த 2019-ம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் 20 20 ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை நடந்துள்ளது .இது குறித்து சிறுமியின் தாய் கோவை கிழக்கு பகுதி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து முதியவர் அல்போன்சை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர் . இந்த வழக்கு விசாரணை கோவை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி குலசேகரன் குற்றம் சாட்டப்பட்ட முதியவர் அல்போன்சுக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ 10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ 5 ஆயிரம் நிவாரண நிதி வழங்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.