மாடு துரத்தியதால் பயந்து ஓடிய கல்லூரி மாணவி பைக் மோதி பரிதாப சாவு..

கோவை அருகே உள்ள பேரூர் செட்டிபாளையத்தைச் சேர்ந்தவர் சிவா. இவரது மகள் ஜனனி ( வயது 18) கோவையில் உள்ள ஒரு கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார் .நேற்று வழக்கம்போல் கல்லூரிக்கு சென்றார். பின்னர் கல்லூரி முடிந்து நேற்று மாலையில் வீட்டுக்கு செல்வதற்காக கோவை புதூர் வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகே பஸ் நிறுத்தத்துக்கு வந்தார் .அப்போது அந்த பகுதியில் சுற்றி திரிந்த ஒரு மாடு ஜனனியை நோக்கி ஓடிவந்தது .அந்த மாடு தன்னை முட்டுவதற்காகத்தான் துரத்துவதாக நினைத்த மாணவி ஜனனி பஸ் நிறுத்தத்தில் இருந்து தலை தெரிக்க ஓடினார்.. அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் ஜனனி மீது பயங்கரமாக மோதியது .இதில் அவர் படுகாயம் அடைந்தார் .அவரை மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். வழியில் அவர் இறந்துவிட்டார் .இது குறித்து போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மாடு துரத்தியபோது பயந்து ஒடிய மாணவி மோட்டார் சைக்கிளில் சிக்கி பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.