திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி பெண் பைலட்டிடம் ரூ.16 லட்சம் கார் மோசடி..!

கோவை அவினாசி ரோட்டில் உள்ள தனியார் அப்பார்ட்மெண்டில் கடந்த 5 ஆண்டுகளாக வசிப்பவர் 35 வயது பெண். இவர் ” ஏர் இந்தியா ” விமான நிறுவனத்தில் பைலட்டாக வேலை பார்த்து வந்தார். பின்னர் யு. பி. எஸ். சி. தேர்வு எழுதுவதற்காக தனது வேலையை ராஜினாமா செய்தார். இந்த நிலையில் அதே அப்பார்ட்மெண்டில் வசித்து வரும் ஆனந்தராஜ் (வயது 37) என்பருடன் அந்த பெண்ணுக்கு பழக்கம் ஏற்பட்டது. இந்த நிலையில் கடந்த ஆண்டு அந்தப் பெண்ணின் தந்தையிடம் தனக்கு திருமணம் முடிந்து மனைவியை விட்டு பிரிந்து வாழ்வதாகவும் விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதாகவும் அது முடிந்ததும் தங்கள் மகளை திருமணம் செய்து கொள்வதாக உறுதி அளித்தார். இதை நம்பி அந்த பெண் ஆனந்தராஜ்க்கு ரூ.16 லட்சத்துக்கு ஒரு கார் வாங்கி கொடுத்தார். மேலும் பல தடவை பணமும் கொடுத்துள்ளார். இந்த நிலையில் 10 -7- 20 24 அன்று அந்த பெண்ணை ஆனந்தராஜ் அப்பார்ட்மெண்டில் உள்ள வீட்டுக்கு அழைத்துச் சென்று கூல்டிரிங்ஸ் கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்தாராம்.  அதை வீடியோவில் பதிவு செய்து மிரட்டினாராம். அந்தப் பெண் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு பல தடவை கேட்டும் மறுத்துவிட்டார் .மேலும் அவரது ஜாதி பெயரை சொல்லியும் திட்டினாராம். இந்த நிலையில் கோவை மத்திய பகுதி அனைத்து பெண்கள் காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட அந்த பெண் புகார் செய்தார் .போலீசார் ஆனந்தராஜ் மீது 6 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்கள்..