கோவை ஒப்பணக்கார வீதியை சேர்ந்தவர் சங்கரசுப்பிரமணியம். தங்க நகை மொத்த வியாபாரி.. இவர் கோவை மாநகர மத்திய குற்றப்பிரிவு போலீசில் ஒரு புகார் மனு கொடுத்திருந்தார். அந்த மனுவில் அவர் கூறியிருந்ததாவது:- மும்பை செம்பூரை சேர்ந்த தங்க கட்டி வியாபாரம் செய்யும் தீரஜ் குமார் ( வயது 55) அவரது மகன் குணால் தீரஜ் குமார் ( வயது 30) ஆகியோர் எங்கள் நிறுவனத்துக்கு 8 கிலோ தங்க கட்டி தருவதாக கூறி ரூ 4 கோடியே 80 லட்சம் வாங்கினார்கள். ஆனால் 4 கிலோ எடையுள்ள தங்க கட்டிகளை மட்டுமே கொடுத்தனர். மேலும் 4 கிலோ தங்ககட்டிகளை கொடுக்காமல் ஏமாற்றி விட்டனர். இதன் மதிப்பு ரூ 2 கோடியே 40 லட்சம் இருக்கும். இவர்கள் 2 பேர் மீதும் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.இவ்வாறு அதில் கூறியிருந்தனர். தந்தை – மகன் ஆகிய 2 பேரையும் பிடிக்க மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் உதவி கமிஷனர் ராஜன் மும்பைக்கு தனிப்படை அனுப்பினார் . மும்பை சென்ற தனிப்படையினர் தீரஜ் குமாரையும், அவரது மகன் குணால் தீரஜ் குமாரையும் கைது செய்து கோவைக்கு அழைத்து வந்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. பின்னர் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்..
தங்க கட்டி தருவதாக ரூ. 2.40 கோடி மோசடி – தந்தை , மகன் கைது..!
