கோவை பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் அலுவலகத்தில் புகுந்த மர்ம நபர்- பேருந்து முன் பாயந்து தற்கொலை..சிசிடிவி காட்சிகள் வெளியீடு.!

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் அருகே பாஜக தெற்கு சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ .வானதி சீனிவாசன் அலுவலகம் உள்ளது.இங்கு நேற்றுமுன் தினம் மாலை ஒரு ஆசாமி திடீரென்று உள்ளே புகுந்த மர்ம நபர் அலுவலகத்தின் கதவை உள் பக்கமாக தாழ்போட முயன்றார்.

இதைப் பார்த்த அலுவலக ஊழியர் விஜயன் அவரை தடுத்து கேட்டுக்கு வெளியே தள்ளினார். பின்னர் அந்த வாலிபர் எழுந்து அங்கிருந்து சென்று விட்டார். இது குறித்து அலுவலக ஊழியர் விஜயன் ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் செய்தார். இந்த நிலையில் அந்த வாலிபர் நேற்று முன்தினம் இரவு 10 மணி அளவில் அவினாசி ரோட்டில் உள்ள ஜி.டி ஆடிட்டோரியம் அருகே பிணமாக கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.இது குறித்து போக்குவரத்து புலனாய்வு போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இறந்து கிடந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் இறந்து கிடந்த நபரும் பாஜக எம்எல்ஏ அலுவலகத்தில் புகுந்த நபரும் ஒருவர் தான் என தெரிய வந்தது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து போக்குவரத்து புலனாய்வு போலீசார் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை நடத்தினர். இதில் அவர் அந்த வழியாக சென்ற அரசு பஸ்சில் திடீரென்று பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.

இதுகுறித்து போக்குவரத்து புலனாய்வு போலீசார் கூறியதாவது:- பாஜக எம்எல்ஏ அலுவலகத்தில் புகுந்த நபர் அவினாசி ரோடு.ஜி.டி. மியூசியம் அருகே செல்லும் போது அந்த வழியாக வந்த அரசு பஸ்சில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார். இது குறித்த காட்சி சி.சி.டிவி. கேமராவில் பதிவாகி உள்ளது. இதையடுத்து இந்த வழக்கு தற்கொலை வழக்காக மாற்றப்பட்டு ரேஸ்கோர்ஸ் போலீசில் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இறந்தவர் யார் ?எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது தெரியவில்லை .இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

இது தொடர்பாக வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. கூறியதாவது:- எனது அலுவலகத்திற்கு அடையாளம் தெரியாத நபர் புகுந்துள்ளார் .அவர் எதற்காக வந்தார்? என்பது தெரியவில்லை .அப்போது நான் அலுவலகத்தில் இல்லை. அந்த நபர் குறித்து உதவியாளர் எனக்கு தகவல் தெரிவித்தார். இதுகுறித்து போலீசில் புகார் கொடுக்கும் படி கூறினேன். அவரும் அதன் படி புகார் அளித்தார். இந்த நிலையில் அலுவலகத்திற்குள் நுழைந்த நபர் அவினாசி ரோட்டில் இறந்து கிடப்பதாக தகவல் தெரிய வந்தது அவர் யார்? என்று தெரியவில்லை .இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்..