மின்சார டவர் மேல் ஏறிய ஓய்வு பெற்ற அரசு போக்குவரத்து கழக ஊழியரால் திடீர் பரபரப்பு..!

திருச்சி கோர்ட் எம்ஜிஆர் சிலை அருகில் உள்ள உயர் அழுத்த மின்சார டவர் மேல் ஏரி தற்கொலைக்கு முயன்ற அரசு போக்குவரத்து கழக நடத்துனர். திருச்சி உறையூரைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவர் போக்குவரத்து கழகத்தில் ஓட்டுநராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். ஓய்வுபெற்ற பிறகு சமூக செயற்பாட்டாளராக இருந்து வருகிறார். இவர் நடந்து முடிந்த எம்.பி தேர்தலில் திருச்சி நாடாளுமன்றத் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டு 675 வாக்குகள் பெற்றார். இந்தநிலையில் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட மனுத்தாக்கல் செய்திருந்தார். ஆயினும் அவரது மனு தேர்தல் ஆணையத்தால் நிராகரிக்கப்பட்டது. இதனை கண்டித்து ராஜேந்திரன் இன்று காலை திருச்சி நீதிமன்றம், எம்.ஜி.ஆர் சிலை அருகே உள்ள உயர்மின்னழுத்த கோபுரத்தில் ஏறி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டார். இதையடுத்து கண்டோன்மெண்ட் தீயணைப்புத் துறையினர் காவல்நிலைய ஆய்வாளர் ராஜேஷ் கண்ணா திருச்சி மேற்கு தாசில்தார் விக்னேஸ்வரன் ஆகியோர் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். ஆயினும் சமாதானம் அடையாத ராஜேந்திரன் தனது போராட்டத்தை தொடர்ந்தார். அவர் போராட்டத்தை வேடிக்கை பார்க்க பொதுமக்கள் கூடியதால் எம்.ஜி.ஆர் சிலை பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து ஆட்டோ டிரைவர்கள் சிலர் காவல்துறை தீயணைப்புத் துறையினரின் உதவியுடன் டவரின் மீது ஏறி அவரை வலுக்கட்டாயமாக கீழே இறக்கினர். இதனால் அவரின் இரண்டு மணி நேர போராட்டம் முடிவுக்கு வந்தது. இதனைத் தொடர்ந்து கண்டோன்மெண்ட் போலீசார் ராஜேந்திரனை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மின்சார டவர் மேல் ஏறி நின்ற நடத்துனரால் கோர்ட் எம்ஜிஆர் சிலை அருகே போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது..