திம்பம் மலைப்பாதையில் லாரி மீது லாரி மோதி விபத்து: அந்தரத்தில் தொங்கிய லாரி – அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ஓட்டுநர்.!!

தமிழக கர்நாடக மாநிலங்களை இணைக்கும் சத்தியமங்கலம் – மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் பண்ணாரி அம்மன் கோவில் அடுத்துள்ள அடர்ந்த வனப்பகுதியில் 27 கொண்டை ஊசி வளைவுகளுடன் கூடிய திம்பம் மலைப்பாதை அமைந்துள்ளது.

இந்த மலைப்பாதை வழியாக பஸ் மற்றும் சரக்கு வாகன போக்குவரத்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தாளவாடி மலைப்பகுதியில் இருந்து கரும்பு பாரம் ஏற்றிய இரண்டு லாரிகள் சத்தியமங்கலத்தில் உள்ள தனியார் சர்க்கரை ஆலைக்கு செல்வதற்காக திம்பம் மலைப்பாதை வழியாக சென்று கொண்டு இருந்தன. இருபதாவது கொண்டை ஊசி வளைவு அருகே இரண்டு லாரிகளும் ஒன்றன்பின் ஒன்றாக சென்றபோது பின்புறம் வந்த கரும்பு லாரி பிரேக் பிடிக்காமல் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்ததால் முன்னால் சென்று கொண்டிருந்த கரும்பு லாரி மீது மோதியது. இந்த விபத்தில் முன்பக்கம் சென்ற கரும்பு லாரி கட்டுப்பாட்டை இழந்து சாலையோர தடுப்பு சுவரை உடைத்துக் கொண்டு அந்தரத்தில் தொங்கியது. இந்த விபத்தில் லாரியை ஓட்டிச் சென்ற ஓட்டுனர் ஆறுமுகசாமி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். லாரியில் கரும்பு பாரம் இருந்ததால் லாரி மலைப்பாதையில் கவிழாமல் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதையடுத்து மலைப்பாதையில் அந்தரத்தில் தொங்கும் லாரியை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. இது குறித்து தகவல் அறிந்த ஆசனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.