அமமுக மகளிர் அணி மாவட்ட செயலாளரிடம் நகை கொள்ளை – கணவருடன் பைக்கில் சென்ற போது துணிகரம்.!!

கோவை கணபதி, நேரு நகர் 4-வது வீதியை சேர்ந்தவர் விஜயகுமார் .இவரது மனைவி சந்திரகலா ( வயது 50)இவர் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கட்சியின் கோவை மாவட்ட மகளிர் அணி மாவட்ட செயலாளராக பதவி வகித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சந்திரகலா தனது கணவருடன் மோட்டார் சைக்கிளில் சத்தி ரோட்டில் இருந்து தங்களது வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். அப்போது இவர்களை பின் தொடர்ந்து மோட்டார் சைக்கிள் வந்த மர்ம நபர் ஒருவர் கண்ணிமைக்கும் நேரத்தில் சந்திரகலா கழுத்தில் அணிந்திருந்த 15 பவுன் தங்க செயினை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பி சென்று விட்டார். இதில் மோட்டார் சைக்கிள் இருந்து தவறி விழுந்த சந்திரகலாவும், அவரது கணவர் விஜயகுமாரும் காயம் அடைந்தனர். அவர்களை அந்த வழியாக வந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து சரவணம்பட்டி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து வருகிறார்கள். கணவருடன் பைக்கில் சென்ற அம்மா மக்கள் முன்னேற்ற கழக மகளிர் அணி மாவட்ட செயலாளரிடம் நகை பறித்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பையும், அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.