கோவையில் வேளாண் மண்டல அளவிலான ஆய்வு கூட்டம் – அமைச்சர்கள் பங்கேற்பு..!

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய 3 மாவட்டங்களுக்கான மண்டல அளவிலான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் தமிழ்நாடு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ஆகியோர் கலந்துகொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர். தொடர்ந்து விவசாயம், மற்றும் விவசாயிகளின் கோரிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் மு.பெ.சாமிநாதன், 3 மாவட்டங்களை சார்ந்த வேளாண் மற்றும் உழவர் நலன் அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றதாக தெரிவித்தார். இந்த ஆய்வுக் கூட்டத்தில் மூன்று மாவட்டங்களில் வேளாண்மை மேம்படுத்துதல், விவசாயிகளை ஊக்கப்படுத்துதல், ஆகியவை குறித்து ஆய்வு மேற்கொண்டதாக தெரிவித்தார். எதிர்காலத்தில் உழவிடும் உணவை உற்பத்தி செய்கின்ற பொழுது உடல் நலத்தை பாதுகாக்கின்ற வகையில் இருக்க வேண்டும் என அதிகாரிகள் விவசாயிகளுக்கு வழி காட்ட வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும், நிர்ணயித்த இலக்கை விட அதிகமாக உணவுப் பொருட்களை உற்பத்தி செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம், தென்னை வாடல் நோயைப் பொறுத்தவரை கடந்த சில மாதங்களுக்கு முன்பு தீவிரமாக இருந்ததாகவும் அப்பொழுது நேரடியாக சென்று பொள்ளாச்சியில் இது குறித்து ஆய்வுக் கூட்டம் நடத்தி பாதிப்புக்குள்ளான பகுதிகளை கண்டறிந்து வேளாண்துறை மாணவர்கள் மற்றும் அலுவலர்கள் இணைந்து நடவடிக்கை எடுத்ததாக தெரிவித்தார். மேலும் அப்பொழுது பாதிப்புக்குள்ளான விவசாயிகளுக்கு நிவாரணமும் முதலமைச்சரால் வழங்கப்பட்டதாக தெரிவித்தார். மேலும் 22 கோடி மதிப்பீட்டில் தென்னை வாடல் நோயாய் பாதிக்கப்பட்ட மரங்களை அகற்றி நோய் தடுப்பு மருந்துகள் வழங்கப்பட்டதாகவும் கூறினார்.

யானை வழித்தடத்தில் உள்ள கல்லாறு பழ பண்ணை எடுக்கப்படுவது குறித்தான கேள்விக்கு பதில் அளித்த அவர், நீதிமன்றத்தால் அந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் தமிழக அரசும் அதற்குரிய நடவடிக்கையை சட்டரீதியாக எடுத்து வருவதாக தெரிவித்தார். கொப்பரை தேங்காய் பணியை தீவிர படுத்திருப்பதாக தெரிவித்த அமைச்சர் இது சம்பந்தமாக ஒன்றிய அரசுக்கும் நெருக்கடி தந்து வருவதாக கூறினார். மேலும் இந்த நான்காண்டுகளில் நெல் ஊக்கத்தொகையாக 985 கோடி ரூபாய், இயற்கை பேரிடர் காலங்களில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு 945 கோடி ரூபாய் தமிழக அரசால் வழங்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார். அதுமட்டுமின்றி அனைத்து கிராம வேளாண் திட்டத்தின் கீழ் 46 லட்சம் இலவச தென்னங்கன்றுகள், மரக்கன்றுகள் வழங்கப்பட்டிருப்பதாகவும் வனவிலங்குகளால் ஏற்படும் அதிகப்படியான விவசாய பொருட்கள் இழப்பீடுகளுக்கும் நிவாரணம் வழங்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். இக்கூட்டத்தில் கோவை எம்பி கணபதி ராஜ்குமார், கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்திகுமார் பாடி, உட்பட வேளாண் துறை சார்ந்த அதிகாரிகள்,அலுவலர்கள் கலந்து கொண்டனர்.