அதிமுக – பாஜக கூட்டணி முறிவுக்கு அண்ணாமலை தான் காரணம் – எஸ்.பி. வேலுமணி குற்றச்சாட்டு.!

2024 நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் தமிழகம், புதுவையை பொறுத்தவரையில் 40 தொகுதிகளையும் திமுக கூட்டணி கைப்பற்றியிருக்கிறது. முன்னதாக கூட்டணியில் இருந்த பாஜகவும், அதிமுகவும் தனித்தனியாக கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொண்ட நிலையில் இரு கட்சிகளுமே ஒரு தொகுதியை கூட வெல்ல முடியாமல் போனது. அதிமுக 7 தொகுதிகளிலும், பாஜக 11 தொகுதிகளிலும் டெபாசிட் இழந்தது.

தேர்தல் முடிவுகளுக்கு பின்னதாக செய்தியாளர்களை சந்தித்த பாஜக தலைவர் அண்ணாமலை, தமிழ்நாட்டில் 50 ஆண்டுகளாக அரசியலில் இருப்பவர்களே 7 இடங்களில் டெபாசிட் இழந்திருக்கிறார்கள். ஐந்துமுறை ஆட்சியிலிருந்த கட்சியினர் டெபாசிட் இழந்திருக்கின்றனர். அதை நடத்திக்காட்டியது பா.ஜ.க. 2026-ல் தமிழ்நாட்டில் ஆட்சியைப் பிடிக்கப்போகிறோம். அதுதான் எங்களின் இலக்கு என அதிமுக குறித்து விமர்சித்தார்.

அண்ணாமலையின் கருத்துக்கு அதிமுக 2ஆம் கட்ட தலைவர்கள் எதிர்வினையாற்றி வருகின்றனர்.

அந்த வகையில் அதிமுக கொரடாவும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி வேலுமணி இன்று கோவை அதிமுக அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில்,

‘நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் அதிமுகவிற்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி . கடந்த பல தேர்தல்களில் அதிமுக தோல்வி அடைந்திருந்தாலும், அடுத்து பல வெற்றிகளை பதிவு செய்துள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் 19.3% வாக்குகள் அதிமுக பெற்றது , இந்த தேர்தலில் 20.4 சதவீத வாக்குகள் பெற்று வாக்கு சதவீதம் உயர்ந்துள்ளது. மக்களுக்கு பல்வேறு திட்டங்களை அதிமுக அரசு செயல்படுத்தி உள்ளது , தொடர்ந்து மக்கள் நலனில் அக்கறை கொண்டு அதிமுக செயல்படும்.

அண்ணாமலை பாஜக தலைவர் ஆனது முதல் தான் கூட்டணியில் விரிசல் ஏற்பட்டு, பிளவுற்றுள்ளது. தமிழிசை, எல்.முருகன் தமிழக பாஜக தலைவர்களாக செயல்பட்ட போது அதிமுகவுடன் சுமூக உறவு நீடித்தது. பாஜக அதிமுகவுடன் இணைந்து போட்டியிட்டு இருந்தால் 30 முதல் 35 இடங்களை வென்றிருக்க முடியும். அண்ணாமலை ஊடக பலத்துடனும், பணம் செலவு செய்தும் தோல்வியடைந்துள்ளார். மத்தியில் மோடி தலைமையில் பாஜக ஆட்சி அமைந்த உடன், அண்ணாமலை தமிழக மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி தர வேண்டும்.2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மையுடன் அதிமுக வெற்றி பெறும்’