பாஜக தலைவர்கள் அண்ணாமலை, தமிழிசை சவுந்தராஜன் கைது..!

டாஸ்மாக் முறைகேட்டை கண்டித்து போராட்டம் அறிவித்த நிலையில் சென்னையில் பாஜக மூத்த தலைவர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

டாஸ்மாக் முறைகேட்டை கண்டித்து சென்னை எழும்பூரில் உள்ள அதன் தலைமை அலுவலகத்தை இன்று பாஜக முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என தெரிவித்திருந்த நிலையில் சென்னை சாலிகிராமில் உள்ள பாஜக முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் இல்லத்தின் முன்பு 20-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். தொடர்ந்து காவல்துறை தடையை மீறி போராட்டத்துக்கு புறப்பட்ட தமிழிசை கைது செய்யப்பட்டார். அவருடன் பாஜக தொண்டர்கள் பலரும் கைது செய்யப்பட்டனர்.

அதேபோல் பாஜக தலைவர்கள் வினோஜ் பி. செல்வம் ஆகியோரையும் காவல்துறை வீட்டு காவலில் வைத்துள்ளது. அதேநேரம், தலைமைச்செயலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர் கைது செய்யப்பட்டனர்.

இதற்கிடையே, பாஜகவினர் கைதுக்கு மாநிலத் தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். அண்ணாமலை வெளியிட்ட பதிவில், “திமுக அரசின் ரூ.1,000 கோடி டாஸ்மாக் ஊழலைக் கண்டித்து, தமிழக பாஜக சார்பில், இன்று சென்னை டாஸ்மாக் தலைமை அலுவலகம் முற்றுகைப் போராட்டம் அறிவித்திருந்தோம். தொடை நடுங்கி திமுக அரசு, பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் ஆளுநருமான, அக்கா தமிழிசை, மாநிலச் செயலாளர் வினோஜ் பி. செல்வம் மற்றும் மாநில மாவட்ட நிர்வாகிகளைப் போராட்டத்தில் பங்கேற்கக் கூடாது என, வீட்டுச் சிறையில் வைத்திருக்கிறது.

பல ஆண்டுகளாக ஒரே இடத்தில் பசைபோட்டு ஒட்டியது போல இருக்கும் ஆட்களைக் கொண்டு, கீழ்மட்டத்தில் இருக்கும் அதிகாரிகளை உங்கள் ஏவலுக்குப் பயன்படுத்திக் கொண்டு இருக்கிறீர்கள். ஜனநாயக ரீதியாகப் போராட்டம் அறிவித்து, முற்றுகை தேதியை முன்னரே அறிவித்ததால்தானே, உங்களால் இதுபோன்ற கோழைத்தனமான நடவடிக்கைகளில் ஈடுபட முடிகிறது?. தேதியே அறிவிக்காமல், திடீரென்று ஒருநாள், நாங்கள் போராட்டத்தை முன்னெடுத்தால் உங்களால் என்ன செய்ய முடியும்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

தொடர்ந்து டாஸ்மாக் அலுவலக முற்றுகைப் போராட்டம் அறிவிக்கப்பட்ட நிலையில் பாஜக தலைவர் அண்ணாமலை கைது செய்யப்பட்டார். போரட்டத்தில் பங்கேற்க பனையூரில் உள்ள தனது இல்லத்தில் இருந்து அண்ணாமலை புறப்பட்ட நிலையில் அக்கரையில் வைத்து காவல்துறை அவரை கைது செய்தது.