கோவை போலீஸ்காரரை தாக்கி கொல்ல முயற்சி – 4 பேருக்கு வலைவீச்சு..!

கோவை மாநகரம் ரத்தினபுரி காவல் நிலையத்தில் போலீஸ்காரராக வேலை பார்த்து வருபவர் குமரேசன். இவர் நேற்று இரவு கண்ணப்ப நகர், ஆர். ஜி. நகர் பகுதியில் ரோந்து சுற்றி வந்தார். அப்போது அங்குள்ள மாரியம்மன் கோவில் அருகே பொது மக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் ஸ்கூட்டரில் 4 பேர் வேகமாக வந்து கொண்டிருந்தனர். அவர்களை போலீஸ்காரர் குமரேசன் தடுத்து நிறுத்தினார். அப்போது அந்த 4 பேரும் சேர்ந்து போலீஸ்காரரை தகாத வார்த்தைகளால் பேசி, கீழே பிடித்து தள்ளினர். இதில் அவர் கீழே விழுந்தார். பின்னர் அவருக்கு கொலை மிரட்டல் விடுத்துவிட்டு அந்த கும்பல் தப்பி சென்று விட்டது. இது குறித்து ரத்தினபுரி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் தப்பி ஓடிய 4 பேரை தேடி வருகிறார்கள். இவர்கள் மீது அரசு ஊழியரை பணி செய்ய விடாது தடுத்தல், கொலை மிரட்டல் உட்பட 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.