ஜம்மு – காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தின் பெஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் சுற்றுலாப் பயணிகள் 28 பேர் பலியானதைத் தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின் பேரவையில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஜம்மு-காஷ்மீரின் பெஹல்காமில் உள்ள சுற்றுலாத் தலத்தில் பயங்கரவாதிகள் செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3 மணியளவில் நடத்திய கொடூர துப்பாக்கிச் சூடு தாக்குதலில் 2 வெளிநாட்டினர் உள்பட 28 பேர் கொல்லப்பட்டனர். பலர் படுகாயமடைந்தனர்.
இதுபற்றி முதல்வர் மு.க.ஸ்டாலின் பேரவையில் பேசுகையில், ” ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தில் பெஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு கடும் கண்டனத்தையும், பலியானவர்களின் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
நேற்றைய தினம் பயங்கரவாதிகள் மிகவும் கொடூரமாக தாக்குதலை நடத்தியிருக்கிறார்கள். இதுவரை 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்ட சம்பவம் நமக்கு அதிர்ச்சியளித்திருக்கிறது.
ஜம்மு – காஷ்மீரில் பெஹல்காமுக்கு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து மட்டுமல்ல, உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் காஷ்மீருக்கு சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். பைசரான் பகுதியில் மனிதாபிமானமற்ற வகையில் அப்பாவி மக்கள் மீதான தாக்குதலுக்கு இந்திய மண்ணில் அறவே இடம் இல்லை. இது போன்ற கடுமையாக தாக்குதல் கண்டிக்கத்தக்கது.
இது மிகவும் மோசமான தாக்குதல் என்று ஜம்மு – காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா தெரிவித்திருக்கிறார். தீவிரவாத அமைப்புகள் எத்தகைய எண்ணம் கொண்டவையாக இருந்தாலும் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். இந்தத் தகவல் கிடைத்ததும் தில்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் 24 மணி நேரமும் செயல்படும் உதவி மையம் செயல்பட உத்தரவிடப்பட்டுள்ளது.
தேவையான உதவிகளை செய்யவும், மருத்துவ வசதிகளை செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது. அனைவரும் தேவையான சிகிச்சை வழங்கவும் உத்தரவிட்டப்பட்டுள்ளது. 2017 ஆம் ஆண்டு குல்ஹாமில் 8 பக்தர்களும், 2019 ஆம் ஆண்டில் புல்வாமாவில் 40 ராணுவ வீரர்களும் கொல்லப்பட்டனர்.
இது போன்ற தாக்குதல்கள் உடனடியாக நிறுத்தப்படவேண்டும். வரும் காலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்தகைய நடவடிக்கை எடுக்கும் வகையில் தமிழ்நாடும், தமிழ்நாட்டு மக்களும் துணை நிற்பார்கள் ” எனத் தெரிவித்தார்.