முதல்வர் ஸ்டாலின் சென்ற விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..!

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொழில் முதலீடுகளை ஈர்க்க அமெரிக்கா சென்ற நிலையில் அவர் பயணித்த விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

துபாயில் தரையிறங்கிய விமானத்தில் அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளதாக தற்போது தகவல் வெளியாகியிருக்கிறது.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று இரவு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக அமெரிக்கா புறப்பட்டு சென்றார். சென்னை விமான நிலையத்திலிருந்து அமெரிக்கா செல்லும் அவர் அங்கு செப்டம்பர் 12ஆம் தேதி வரை அதாவது 17 நாட்கள் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். 28ஆம் தேதி அன்று அமெரிக்காவில் சான் பிரான்சிஸ்கோ செல்லும் முதலமைச்சர் அங்கு நடைபெறும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொள்கிறார். 31ஆம் தேதி சான்பிரான்சிஸ்கோவில் புலம்பெயர்ந்த தமிழர்களை சந்தித்து பேசுகிறார் முதலமைச்சர் முக ஸ்டாலின். தொடர்ந்து அமெரிக்காவின் பல்வேறு முன்னணி நிறுவனங்களின் நிறுவனர்கள் தலைவர்கள் உள்ளிட்டவர்களை சந்தித்து பேசுகிறார். தொடர்ந்து செப்டம்பர் இரண்டாம் தேதி அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் இருந்து சிகாகோ செல்லும் முதலமைச்சர் தொடர்ந்து பத்து நாட்கள் அதாவது 12ஆம் தேதி அங்கேயே தங்கி இருந்து, பல்வேறு நிறுவனங்களின் சிஇஓக்கள் மற்றும் தலைவர்கள் உள்ளிட்ட முதலீட்டாளர்களை சந்திக்கிறார். மேலும் உலகின் முன்னணி தொழில் நிறுவனங்களாக கருதப்படும் ஃபார்ச்சூன் 500 பட்டியலில் உள்ள நிறுவன தலைவர்களை முதலமைச்சர் ஸ்டாலின் சந்திக்கிறார். தொடர்ந்து 7ஆம் தேதி அயலக தமிழர்களுடன் முதலமைச்சர் ஸ்டாலின் சந்திப்பை மேற்கொள்கிறார். செப்டம்பர் 12ஆம் தேதி அமெரிக்காவில் அனைத்து நிகழ்ச்சிகளையும் முடித்துக் கொண்டு முதல்வர் தமிழகம் திரும்புகிறார். இந்நிலையில் அமெரிக்கா சென்ற தமிழக முதல்வர் ஸ்டாலின் பயணித்த விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதாக பரபரப்பு தகவல் வெளியாகி இருக்கிறது. சென்னையில் இருந்து எமிரேட்ஸ் விமானத்தில் துபாய் சென்று அங்கிருந்து அமெரிக்கா செல்வதாக முதல்வரின் பயணத்திட்டம் வகுக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் சென்னையிலிருந்து விமானம் புறப்பட்டபோது மின்னஞ்சலில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு இருந்ததை அதிகாரிகள் கண்டறிந்தனர். அதிகாலை துபாய் சென்றடையும் வரை அதிகாரிகள் மிகவும் பதற்றத்தோடு இருந்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து புதன்கிழமை அதிகாலையில் துபாயில் விமானம் தரை இயங்கிய பிறகு அதில் சோதனை நடத்தப்பட்டது. அப்போதுதான் வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரிய வந்தது. இதனையடுத்து துபாயிலிருந்து முதல்வர் பயணித்த விமானம் சான்பிரான்சிஸ்கோ புறப்பட்டு சென்றது.

இதேபோல சென்னை விமான நிலையத்திற்கும் வெடிகுண்டு விடுக்கப்பட்டதை அடுத்து மத்திய தொழில் பாதுகாப்பு படையினரும் போலீசாரும் மோப்பநாய் மற்றும் மெட்டல் டிடெக்டர் கொண்டு பல இடங்களில் சோதனை நடத்தினர். சோதனை போது அந்த மிரட்டலும் புரளி தான் என தெரிய வந்தது. வெடிகுண்டு மிரட்டல் காரணமாக பாதுகாப்பு படையினர் சோதனை நடத்தியதால் பயணிகள் சற்று பதற்றம் அடைந்தனர். கடந்த சில நாட்களாகவே விமான நிலையத்திற்கும் விமானங்களுக்கும் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது. மூன்று மாதங்களில் மட்டும் சென்னையில் விமான நிலையத்திற்கு 10 முறை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருக்கிறது..