வீட்டின் பூட்டினை உடைத்து தங்க நகைகள், பணத்தை திருட்டு – 2 கொள்ளையர்கள் கைது.!!

கோவை மாவட்டம் நெகமம் பகுதியில் வசிப்பவர் ஜெகதீஸ்வரன் (வயது 47) இவர் கடந்த 12.09.2024 அன்று மலுமிச்சம்பட்டியில் உள்ள அவரது மகன்களை பார்த்து விட்டு திரும்பி வந்து பார்த்தபோது, அவரின் வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டு கிடந்தது. வீட்டில் பீரோவிலிருந்த சுமார் 12 சவரன் தங்க நகை மற்றும் ரூபாய் 8 லட்சம் பணத்தை அடையாளம் தெரியாத நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்து, இது தொடர்பாக ஜெகதீஸ்வரன் நெகமம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேற்படி திருட்டு வழக்கில் விரைந்து குற்றவாளிகளை கைது செய்ய, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் .கார்த்திகேயன் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டது- புலன் விசாரணை மேற்கொண்டும், சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தும், புலன் விசாரணை செய்து வந்த நிலையில் நேற்று தனிப்படையினர் கேரளா மாநிலத்தை சேர்ந்த பழனிசாமி மகன் பைஜு (வயது 30) மற்றும் புருஷோத்தமன் மகன் அனுக்ரா (வயது 28) ஆகியோர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். இதில் மேற்படி வீட்டின் பூட்டினை உடைத்து திருடிய வழக்கில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டதன் பேரில், பைஜு மற்றும் அனுக்ரா ஆகியோர்களை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 12 பவுன் தங்க நகைகள், ரூ 6, லட்சத்து 90 ஆயிரம் பணம் மற்றும் திருட்டிற்கு பயன்படுத்திய நான்கு சக்கர வாகனம்-1 ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். கொள்ளையர்கள் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த திருட்டு வழக்கில் துரிதமாக துப்பு துலக்கி கொள்ளையர்களை கைது செய்து நகை – பணத்தை மீட்ட  தனி படை யினரை கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர். கார்த்திகேயன் பாராட்டினார்..