கோவையில் கடந்த மாதம் 23-ந் தேதி நடந்த கார் வெடிப்பில் ஜமேஷா முபின் உயிரிழந்தான். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தை தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். கார் வெடிப்பு சம்பவம் நடைபெற்றதில் இருந்து தற்போது வரை தமிழகம் முழுவதும் 137 இடங்களில் சோதனை நடத்தப்பட்டுள்ளது. கோவையில் நேற்று மட்டும் எஸ்.டி.பி.ஐ. மற்றும் த.மு.மு.க. பிரமுகர்கள் வீடு உள்ள 18 இடங்களில் போலீசார் சோதனை நடத்தினர். கோவை மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட இயக்கத்தின் அனுதாபிகள், ஆதரவாளர்கள், சந்தேகத்திற்கு இடமானவர்கள் என 900 பேரை போலீசார் கண்டறிந்துள்ளனர். அது தொடர்பான பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் அனைவரும் போலீசாரின் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர். அவர்களை தொடர்ந்து கண்காணிக்கும் பணியையும் போலீசார் தொடங்கி உள்ளனர். இந்த பட்டியல் அடிப்படையில் இவர்களிடம் விசாரணை நடத்தவும் போலீசார் திட்டமிட்டு அதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளனர். மேலும் இவர்களின் வீடுகளிலும் சோதனை நடத்துவதற்கு தேவையான அனைத்து பணிகளும் போலீஸ் தரப்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனிடையே கோவை நகரில் உள்ள சில அமைப்புகளின் தரவுகளை சேகரிக்கும் பணியில் மாநகர போலீசார் ஈடுபட்டுள்ளனர். இதற்காக 25 கேள்விகள் அடங்கிய கேள்விதாள் தயாரிக்கப்பட்டு சந்தேகத்திற்கிடமான நபர்களிடம் கொடுக்கப்பட்டு அதற்கான பதில்கள் பெறப்பட்டு வருகிறது. அதில் பெயர், முகவரி, கல்வி தகுதி, சமூக வலைதள கணக்குகள், வங்கி கணக்குகள் என பல விதமான கேள்விகள் கேட்கப்படுகின்றன. இதேபோன்று கோவை புறநகர் பகுதிகளிலும் தரவுகள் தயாரிக்கப்பட இருக்கின்றன.
கார் வெடிப்பு சம்பவம் : கோவையில் சந்தேகத்திற்கு இடமானவர்கள் 900 பேரை கண்காணிக்கும் போலீசார்..!!
