நடுரோட்டில் கார் கவிழ்ந்து விபத்து: கோவை போலீஸ் இன்ஸ்பெக்டர் மகன் பரிதாப பலி- கல்லூரி மாணவர் படுகாயம்..

கோவை காந்திபுரம், 5-வது வீதியை சேர்ந்தவர் முருகாசலம். இவர் திருப்பூர் மாவட்டம் குண்டடத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வருகிறார். இவரது மகன் கார்த்திக் ஸ்ரீபதி(வயது17). இவர் கோவையில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் பி.எஸ்சி (ஐ.டி) முதலாம் ஆண்டு படித்து வந்தார். ரத்தினபுரியை சேர்ந்த இவரது நண்பர் ஸ்ரீஹரி(வயது 17) இவர் பெங்களூரில் உள்ள கல்லூரியில் பி.காம். முதலாம் ஆண்டு படித்து வருகிறார். தற்போது கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு கோவைக்கு வந்துள்ளார். நேற்று கிறிஸ்துமஸ் விடுமுறையை கொண்டாடுவதற்காக கார்த்திக் ஸ்ரீபதி தனது நண்பர் ஸ்ரீஹரியுடன் காரில் செங்கம்பள்ளிக்கு சென்றார். அங்கு கிறிஸ்துமஸ் கொண்டாடி விட்டு, நேற்று அதிகாலையில் கோவை நோக்கி வந்து கொண்டிருந்தனர். காரை ஸ்ரீஹரி ஓட்டினார். கார்த்திக் ஸ்ரீபதி அருகில் அமர்ந்து இருந்தார். அதிகாலை 4.30 மணிக்கு கார் அவினாசி-கோவை ரோட்டில் உள்ள கோகுலம் பார்க் ஒட்டல் சந்திப்பில் வந்த போது ஸ்ரீ ஹரியின் கட்டுப்பாட்டை இழந்து நடுரோட்டில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரில் இருந்த கார்த்திக் ஸ்ரீபதி ரத்த வெள்ளத்தில் அதே இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.ஸ்ரீ ஹரி படுகாயங்களுடன் உயிருக்கு போராடி கொண்டிருந்தார். இதனை அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் பார்த்து சூலூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படுகாயத்துடன் இருந்த ஸ்ரீஹரியை மீட்டு சூலூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர் அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இறந்த கார்த்திக் ஸ்ரீபதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.