கோவையில் கோஷ்டி மோதல் : தொழிலாளி அடித்து கொலை – 2 பேர் காயம்.!!

கோவை பீளமேடு காந்திமா நகரை சேர்ந்தவர் ராசு. இவரது மகன் வேல்முருகன் ( வயது 30).இவர் நேற்று முன்தினம் காரில் கோவை கணபதி வி.ஜி. ராவ் நகர், இ.பி. காலனியை சேர்ந்த ஸ்டாலின் (வயது 42) பீளமேடு பட்டாளம்மன் கோவில் வீதியைச் சேர்ந்த சிவா (வயது 23) ஆகியோருடன்வி.ஜி.ராவ் நகர் பகுதியில் சென்று கொண்டிருந்தார்.அப்போது அங்கு நின்று கொண்டிருந்த இ.பி. காலணியைச் சேர்ந்த மணிகண்டன் (வயது22) பிரதீப், செந்தில் மற்றும் சிலர் சேர்ந்து ஸ்டாலினை கைகளாலும், தென்னை மட்டையாலும் சரமாரியாக தாக்கினார்கள். இதை தடுத்த சிவா, வேல்முருகன் ஆகியோரும் தாக்கப்பட்டனர். முன் விரோதம் காரணமாக இந்த சம்பவம் நடந்துள்ளது. இதில் படுகாயம் அடைந்த ஸ்டாலின் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டிருந்தார். அங்கு சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் இன்று காலையில் இறந்தார். இவர் கூலி தொழில் செய்து வந்தார். இது குறித்து வேல்முருகன் சரவணம்பட்டி போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் சரவணன், சப் இன்ஸ்பெக்டர் ரஜினிகாந்த் ஆகியோர் வழக்கு பதிவு செய்து மற்றொரு கோஷ்டியை சேர்ந்த மணிகண்டன், பிரதீப், செந்தில் உட்பட சிலரை தேடி வருகிறார்கள் . இந்த நிலையில் மற்றொரு கோஷ்டியை சேர்ந்த மணிகண்டன் (வயது 22) கொடுத்த புகாரின் பேரில் வேல்முருகன் ( வயது 30) சிவா ( வயது 23 )ஸ்டாலின் ( வயது 42) ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது..