ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனில் மேகவெடிப்பு ஏற்பட்டதால் அதிகபட்ச மழை பொழிந்துள்ளது. குறிப்பாக பகல் 11:30 மணியிலிருந்து 2:30 மணி வரை சுமார் 3 மணி நேரம் பெய்த கன மழை 19 சென்டி மீட்டர் என பதிவாகியுள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த மாதம் 15ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது. இத்தகைய சூழலில் தான் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. தென் தமிழகத்தில் அதிக கன மழைக்கான வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்திற்கு ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. ஏற்கனவே ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அதிக மழை காரணமாக ரெட் அலர்ட் எச்சரிக்கையாக மாற்றி அறிவித்திருக்கிறது இந்திய வானிலை ஆய்வு மையம்.
இந்நிலையில், ராமேஸ்வரத்தில் மேகவெடிப்பால் பிற்பகல் 1 மணி முதல் மாலை 4 மணி வரை 36 செ.மீ., மழை பதிவாகி உள்ளது.பாம்பனில் காலை 6 மணி முதல் மாலை 4 மணி வரை 23 செ.மீ. மழை பதிவாகி உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேகவெடிப்பு காரணமாக ராமேஸ்வரத்தில் 10 மணி நேரத்தில் 41செ.மீ., மழை வெளுத்து வாங்கியது தங்கச்சிமடத்தில் மாலை 4 மணி வரை 32 செ.மீ., மழை பதிவாகி உள்ளது. மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அதிகன மழை பெய்துள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
ராமேஸ்வரத்தில் 125 ஆண்டுகள் இல்லாத அளவு அதிகன மழை பெய்துள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.