சூலூரில் கந்து வட்டி கேட்டு பெண்ணுக்கு கொலை மிரட்டல் – கோவை பைனான்ஸ் அதிபர் கைது..!

கோவை சூலூர் அருகே உள்ள பள்ளபாளையத்தை சேர்ந்தவர் பழனிச்சாமி .இவரது மனைவி ரெஜினா ( வயது 36) மினி லாரி ஓட்டி வந்தார். இவருக்கு ஒரு மகனும் ,ஒரு மகனும் உள்ளனர். இவர் கடந்த 20 22 ஆம் ஆண்டு ஒண்டிபுதூரை சேர்ந்த பைனாஸ் அதிபர் விஜயகுமார் (வயது 38) என்பவரிடம் ரூ 2 லட்சத்து 50 ஆயிரம், 5,5 சதவீதம் வட்டிக்கு கடன் வாங்கி இருந்தார். அதில் ரூ 1 லட்சத்து 87 ஆயிரம் வட்டி தொகையாக செலுத்தி இருந்தார். இந்த நிலையில் அசலும் கூடுதல் வட்டியும் கேட்டு ரெஜினாவை விஜயகுமார் மிரட்டினாராம். இதனால் ரெஜினா தனது குழந்தைகளை கூட்டிக்கொண்டு சென்னைக்கு சென்றார். கடற்கரையில் தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்துடன் அமர்ந்திருந்தார். அப்போது அங்கு ரோந்து சுற்றி வந்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்திய போது நடந்த சம்பவத்தை பற்றி கூறினார். இது குறித்து கோவை மாவட்ட போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சூலூர் போலீசார் அந்த பெண்ணை வரவழைத்து புகார் பெற்றுக் கொண்டனர். இதன் பெயரில் விசாரணை நடத்தி விஜயகுமாரை நேற்று கைது செய்தனர் .இவர் மீது கந்துவட்டி தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது..