கோவை அரசு பஸ் கண்ணாடி உடைப்பு : கண்டக்டருக்கு பீர் பாட்டில் தாக்குதல் – 3 பேர் கைது..!

கோவை மதுக்கரை அருகில் உள்ள எட்டிமடை, கம்பர் வீதியை சேர்ந்தவர் காமராஜர். இவரது மகன் அரவிந்தராஜ் ( வயது 28 ) இவர் காந்திபுரம் – வேலாந்தவளம் செல்லும் அரசு டவுன் பஸ்சில் கண்டக்டராக வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று குனியமுத்தூர் அருகே பஸ் சென்று கொண்டிருந்த போது சிலர் படிக்கட்டில் தொங்கிக் கொண்டு பயணம் செய்தனர். அவர்களை கண்டக்டர் மேலே ஏறுமாறு கூறினார். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் 3 பேரும் சேர்ந்து குனியமுத்தூர் பஸ் ஸ்டாப்பில் வைத்து கண்டக்டர் அரவிந்தராஜை தாக்கி பீர்பாட்டிலால் பஸ்சின் கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தினார்கள். இந்த தாக்குதலில் கண்டக்டர் அரவிந்தராஜ் படுகாயம் அடைந்தார். இதுகுறித்து குனியமுத்தூர் போலீசில் புகார் செய்யப்பட்டது.. போலீசார் வழக்கு பதிவு செய்து குனியமுத்தூர் திருமூர்த்தி நகரை சேர்ந்த இளவரசன் ( வயது 22) வெற்றிலைக் கார வீதியைச் சேர்ந்த முருகன் (வயது 25) பழனி ஆண்டவர் கோவில் வீதியைச் சேர்ந்த சஞ்சீவ்( வயது20) ஆகியோரை கைது செய்தனர் .இவர்கள் மீது அரசு ஊழியரை பணி செய்ய விடாது தடுத்தல் , தாக்குதல் உட்பட 4 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 3 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்..