என்னை கொல்ல சதி நடக்கிறது – ஒவைசி எம்.பி. பரபரப்பு குற்றச்சாட்டு..!

 என்னை கொல்ல சதி நடக்கிறது என ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவரும், ஹைதராபாத் எம்.பி.யுமான அசதுதீன் ஒவைசி குற்றம் சாட்டியுள்ளார்.

ஹைதராபாத்தில் உள்ள ஏஐஎம்ஐஎம் கட்சி அலுவலகத்தில்அசதுதீன் ஒவைசி செய்தியாளர்களிடம் பேசியதாவது: முஸ்லிம்கள் மீது மத்திய அரசு தனது ஓரவஞ்சனையை வெளிப்படுத்தி வருகிறது. முஸ்லிம்கள் மட்டுமல்லாது பிசி, எஸ்சி, எஸ்டி பிரிவினர் மீதும் தனது அரசியல் காழ்புணர்வால் பழி வாங்கும் தோரணையுடன் மத்திய அரசு நடந்து கொள்கிறது.

டெல்லியில் உள்ள எனது வீட்டில் அடிக்கடி சோதனை நடத்தப்படுகிறது. உத்தர பிரதேச பிரச்சாரத்திற்கு செல்லும் என் மீது 6 ரவுண்ட் துப்பாக்கிச் சூடுநடத்தப்பட்டது.

இந்த சதிச் செயல் தொடர்பாக இதுவரை யாரையுமே போலீஸார் கைது செய்யவில்லை. அசாம் மாநிலத்தில் முஸ்லிம்களின் மக்கள்தொகை 40 சதவீதத்தை கடந்துள்ளது என அம்மாநில முதல்வர்பொய் பிரச்சாரம் செய்து வருகிறார். ஆனால், அங்கு 34 சதவீதம்மட்டுமே உள்ளது. மத்திய அரசுஉட்பட பாஜக ஆளும் மாநிலங்களில் முஸ்லிம்கள் மீது காழ்ப்புணர்வு தொடர்கிறது. மகாராஷ்டிராவில் மசூதிகள் இடிக்கப்பட்டு வருகின்றன.

முஸ்லிம்கள் வசிக்கும் வீடுகள் மீதும் தாக்குதல் நடைபெறுகிறது. என்னை கொல்லப்போவதாக தொலைபேசி, குறுஞ்செய்திகள் மூலம் மிரட்டல்கள் வருகின்றன. ஆனால், இதுகுறித்து எவ்வித நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை. இவ்வாறு அசதுதீன் ஒவைசி பேசினார்.