தொடர் விடுமுறை… சிறப்பு பேருந்துகள் இயக்கம்..!

மிழகத்தில் வார விடுமுறை மற்றும் தொடர் விடுமுறை நாட்களில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம்.

அந்த வகையில் ஆகஸ்ட் 24, 25ஆம் தேதி வார இறுதி நாட்கள் மற்றும் ஆகஸ்ட் 26 ஆம் தேதி கிருஷ்ண ஜெயந்தி என்று தொடர் விடுமுறை வருவதால் தமிழகம் முழுவதும் முக்கிய நகரங்களுக்கு ஏராளமான மக்கள் பயணம் செய்ய இருப்பதால் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள செய்தியில், “சென்னை கிளாம்பாகத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோவை, சேலம், ஈரோடு, திருப்பூர் உள்ளிட்டவற்றிற்கு இன்று 485 பேருந்துகளும், 25 மற்றும் 26 ஆம் தேதியில் திருவண்ணாமலைக்கு 60 பேருந்துகளும், 23, 24 ஆம் தேதிகளில் ஓசூர், பெங்களூர், திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, சென்னை கோயம்பேட்டில் இருந்து 70 பேருந்துகளும், மாதவரத்தில் இருந்து 20 பேருந்துகளும் இயக்கப்படும். பெங்களூர், திருப்பூர், ஈரோடு, கோவை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இருந்து பிற பகுதிகளுக்கு 350 சிறப்பு பேருந்துகள் என்று மொத்தமாக 985 பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த கூடுதல் பேருந்துகளில் பயணம் செய்ய விரும்புவோர் www.tnstc.in என்ற இணையதளம் மற்றும் tnstc செயலி மூலம் முன்பதிவு செய்துள்ளனர். இந்த சிறப்பு பேருந்துகளை கவனிக்க பேருந்து நிலையங்களில் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். வார இறுதி நாட்களில் பயணம் செய்ய 19 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்துள்ளனர்.

இதேபோல் நாகை மாவட்டம் வேளாங்கண்ணி புனித அன்னை ஆரோக்கிய மாதா ஆலய திருவிழா வருகிற 29ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் எட்டாம் தேதி வரை நடைபெற உள்ளதால் அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் சென்னை, பெங்களூர், தூத்துக்குடி, கன்னியாகுமரி, நாகர்கோவில் உள்ளிட்ட நகரங்களில் இருந்தும், அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பில் திருச்சி, தஞ்சாவூர், சிதம்பரம், புதுச்சேரி, திண்டுக்கல், மணப்பாறை, ஓரியூர், பட்டுக்கோட்டை உள்ளிட்ட நகரங்களில் இருந்தும் வேளாங்கண்ணிக்கு 1050 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது