கோவையில் முதல் முறையாக செல்லப் பிராணிகளுக்கு எரியூட்டும் தகன மையம்..!

கோவையில் முதல் முறையாக நாய் மற்றும் செல்லப் பிராணிகள் இறந்தால் அதனை பாதுகாப்பான முறையில் எரியூட்ட, தகன மையம் சீரநாயக்கன்பாளையத்தில் அமைக்கப்பட்டு உள்ளது.

மாநகராட்சி மற்றும் ரோட்டரி சங்கம் ஆகியவற்றுடன் இணைந்து ரூ.35 லட்சம் செலவில் அமைக்கப்பட்டு உள்ள இந்த மையத்தை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் தொடங்கி வைத்தார். மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பின்னர் மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் நிருபர்களிடம் கூறும் போது:-

நமக்கு நாமே திட்டத்தில் ரோட்டரி சங்கத்துடன் இணைந்து நாய்கள் மற்றும் செல்லப் பிராணிகள் இறந்தால் எரியூட்டும் மையம் அமைக்கப்பட்டு உள்ளது. வீட்டு நாய்கள் இறந்தால் அதனை எரியூட்ட கட்டணம் வசூலிக்கப்படும். தெரு நாய்கள் இலவசமான முறையில் எரியூட்டப்படும். ஒருநாளைக்கு 6 நாய்கள் எரியூட்ட வசதி செய்யப்பட்டு உள்ளது. கியாஸ் முறையில் இது இயங்கும். எரியூட்டும் போது சுற்றுப் புற சுகாதாரத்துக்கு கேடு ஏற்படாமலும், அதன் கழிவுகள் வெளியேறாமலும் தடுக்க உரிய சுகாதார முறைகள் கையாளப்படும். கோவை நகரில் 1 லட்சம் தெரு நாய்கள் இருப்பதாக தெரியவந்து உள்ளது. நகரில் தெரு நாய்கள் இறந்தால் அவற்றை அப்புறப்படுத்த போதிய இடவசதி இல்லை. ஆகவே இந்த மையத்தில் எரியூட்ட வசதி செய்து கொடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.