மக்களே… கோடை வெயில் முடிந்து தமிழகத்தின் பல பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. வெயிலின் உக்கிரம் அதிகமிருக்கும் என்று பயந்த மக்களுக்கு இந்த மழை இதத்தைக் கொடுத்தாலும், இந்த திடீர் பருவநிலை மாற்றத்தால் திருப்பூர், கோவை, மதுரை, தேனி, நாமக்கல், அரியலூர், திருவண்ணாமலை, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, தஞ்சாவூர் மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் அதிகரித்து இருப்பதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
ரொம்பவே பத்திரமாக இருங்க. இந்த 10 மாவட்டங்களில் டெங்கு காய்ச்சலுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு பொது சுகாதாரத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
இது குறித்து பொது சுகாதாரத்துறை சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. தினசரி அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் காய்ச்சல் குறித்தான விவரங்களை பதிவேற்றம் செய்து சுகாதாரத்துறைக்கு சமர்ப்பிக்க வேண்டும். இன்புளுயன்சா, மஞ்சள் காமாலை உட்பட உள்நோயாளிகள், பொதுவான அறிகுறிகள் உள்ளவர்களை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.காய்ச்சல் குறித்து மருந்து மாத்திரைகள், தேவையான மருத்துவ உபகரணங்கள், பணியாளர்கள் ஆகியவற்றை போதுமான அளவு இருப்பதையும், அதனை தயார் நிலையிலும் வைத்திருக்க வேண்டும்.டெங்கு பாதிப்பு குறித்து மருத்துவப் பணியாளர்களுக்கு பயிற்சி வழங்க வேண்டும். குடிநீரில் போதுமான அளவு குளோரினேசன் உள்ளதை கண்காணிக்க வேண்டும். டெங்கு பாதிக்கப்பட்ட இடங்களுக்கு சென்று எதனால் டெங்கு பாதிப்பு எற்பட்டது என்பதை ஆய்வு செய்ய வேண்டும். கொசு உற்பத்தியை கட்டுப்படுத்துதல் குறித்து தினசரி அறிக்கையை சுகாதாரத் துறைக்கு சமர்ப்பிக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.