டொனால்ட் டிரம்ப் 34 குற்றங்களில் குற்றவாளி தான்… அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பு..!

ரலாற்றில் முதல் முறையாக முன்னால் அமெரிக்க அதிபர் நீதிமன்றத்தில் குற்றவாளி என்று உறுதி செய்யப்பட்டிருக்கிறார்.

போலி வழிகாட்டு பரிவர்த்தனைகளை பதிவு செய்தது உட்பட 34 குற்றங்களில் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் குற்றவாளி என அந்நாட்டு நீதிமன்றம் அறிவித்துள்ளது.

நடப்பாண்டில் அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் அதிபர் ஜோ பைடனும், குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப்பும் வேட்பாளர்களாக களமிறங்கியுள்ளனர். இருவருக்கும் இடையேயான போட்டி தீவிரமடைந்து வருகிறது. இதனிடையே முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மீது அடுத்தடுத்து குற்றச்சாட்டுகள் கடந்த 2016ம் ஆண்டு முதல் பதிவு செய்யப்பட்டு வருகிறது.

2018ம் ஆண்டு ஆபாச படம் நடிகை ஸ்டார்மி டேனியல்ஸ் என்பவரிடனான திருமணம் தாண்டிய உறவை மறைப்பதற்காக 13 லட்சம் அமெரிக்க டாலர்களை, டிரம்ப் சார்பில் அவரது வழக்கறிஞர் மைக்கேல் கோஹன் கொடுத்ததாக புகார் தெரிவிக்கப்பட்டது. போலியான வணிக பரிவர்தனைகள் மூலமாக ட்ரம்ப் இந்த பணத்தை டேனியல்ஸுக்கு வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

2016ம் ஆண்டு தேர்தலுக்கு முன்பாக இந்த பணம் வழங்கப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், 34 மோசடி வழக்குகள் டிரம்ப் மீது பதிவு செய்யப்பட்டது. மேன்ஹேட்டன் நீதிமன்றத்தில் இந்த வழக்கு நடைபெற்று வந்த நிலையில், அந்நாட்டு நேரப்படி நேற்று மாலை டிரம்ப் மீது சுமத்தப்பட்ட 34 குற்றச்சாட்டுகளிலும் அவர் குற்றவாளி என நீதிபதி மெர்க்கன் அறிவித்துள்ளார். வருகிற ஜூலை 11ம் தேதி டிரம்ப்புக்கான தண்டனை விவரங்கள் அறிவிக்கப்படும் எனவும் நீதிபதி அறிவித்துள்ளார்.இந்த அறிவிப்பு காரணமாக டிரம்ப் தேர்தலில் போட்டியிடுவதில் எவ்வித சிக்கலும் இல்லை என கூறப்படுகிறது. இருப்பினும் அவர் குற்றவாளி என அறிவிக்கப்பட்டால் தேர்தலில் வெற்றி பெற்றாலும் அதிபராக பொறுப்பேற்க முடியுமா என்கிற கேள்வி எழுத்து உள்ளது. மேலும் தேர்தலில் இந்த விவகாரம் அவருக்கு பின்னடைவை ஏற்படுத்தலாம் எனவும் தகவல் வெளியாகி உள்ளது. கிரிமினல் குற்றச்சாட்டிற்கு உள்ளாகும் முதல் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் என்பது குறிப்பிடத்தக்கது.