தூங்கும் போது கழுத்தை நெரித்து குடிகார கணவர் படுகொலை – மனைவி கைது.!!

கோவை அருகே உள்ள சவுரிபாளையம், கருணாநிதி நகரை சேர்ந்தவர் சண்முகநாதன் ( வயது 42). கூலி வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி பாக்கியம்.
இவர்களுக்கு 1 மகன், 1 மகள் உள்ளனர். சண்முகநாதன் அடிக்கடி குடித்துவிட்டு வீட்டில் மனைவி மற்றும் குழந்தைகளுடன் தகராறு செய்து வந்தாராம். இந்த நிலையில் நேற்று அதிகாலையில் சண்முகநாதன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக அவரது மனைவி பாக்கியம் உறவினர்களிடம் கூறியுள்ளார்.
இதைத் தொடர்ந்து சண்முகநாதனின் சகோதரர் கேசவன் , தங்கை மகாலட்சுமி ஆகியோர் வீட்டிற்கு சென்று சண்முகநாதனின் உடலை பார்த்து கதறி அழுதனர். அப்போது மகாலட்சுமி சண்முகநாதனின் கழுத்தில் காயங்கள் இருப்பதை பார்த்து சந்தேகம் அடைந்தார்.  இது குறித்து கோவை பீளமேடு போலீசில் மகாலட்சுமி புகார் செய்தார். அதில் தனது சகோதரர் சண்முகநாதன் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறியிருந்தார். இதைத் தொடர்ந்து இன்ஸ்பெக்டர் தமிழரசு, சப்-இன்ஸ்பெக்டர் மாடசாமி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.  வீட்டில் இறந்து கிடந்த சண்முகநாதன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவரது உடல் இன்று பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.இதுகுறித்து சண்முகநாதனின் மனைவி பாக்கியத்திடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினார்கள். போலீஸ் விசாரணையில் கணவர் குடித்துவிட்டு தினமும் வீட்டில் குழந்தைகளை அடித்து சித்திரவதை செய்து வந்ததாகவும் நேற்று முன்தினமும் சண்முகநாதன் குடித்துவிட்டு வந்து அடித்து கொடுமைப்படுத்தியதாகவும் பாக்கியம், அதன் பிறகு வீட்டில் சண்முகநாதன் அதிகாலையில் அயர்ந்து தூங்கும் போது கழுத்தை நெறித்து கொலை செய்ததாகவும் கூறினார். இதையடுத்து மனைவி பாக்கியம் இன்று கைது செய்யப்பட்டார்.