கிணற்றுத் தவளை போல் பேசுகிறார் இபிஎஸ்… அண்ணாமலை கடும் விமர்சனம்.!!

சென்னை கிண்டியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்ற, இந்திய தொழில் வர்த்தக கூட்டமைப்பு (FICCI) நிகழ்ச்சியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கருணாநிதி 100 ரூபாய் நாணய வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டதை அரசியலாக பேசுகிறார்கள். பாஜகவும் திமுகவும் எதிரும் புதிருமாக கருத்துக்களுடன் களத்தில் உள்ளது. கருணாநிதிக்கு சிறப்பு நாணயம் வெளியிட்டத்தில் மகிழ்ச்சி அடைகிறோம். காமராஜர், அண்ணா, சர்வபள்ளி ராதாகிருஷ்ணன், எம்ஜிஆர் ஆகியோருக்கு எல்லாம் நினைவு நாணயங்கள் வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தை ஆளும் திமுக அரசு மாநில அரசு சார்பில் கருணாநிதி நூற்றாண்டு நாணயம் வெளியிட வேண்டும் என கோரிக்கை வைத்தனர். அதன் அடிப்படையில் மத்திய அரசு அதற்கான அனுமதியை வழங்கியது. திமுகவும், பாஜகவும் ஒரே மேடையில் இருந்ததை அதிமுக பொதுச் செயலாளர் அரசியல் கலந்து பேசுவது வேதனையாக உள்ளது. பாஜக ஆட்சியில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்றெல்லாம் பார்க்கவில்லை. எடப்பாடி பழனிச்சாமிக்கு ஒரு விஷயத்தை உணர்த்த விரும்புகிறேன். எதிரும் புதிரும் ஆக இருந்தாலும் அரசியல் நாகரீகம் வேண்டும் ஒரு தலைவரை மதிப்பது தான் அரசியல் நாகரிகம். மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் அவர்களின் விருப்பத்தின்படி கலைஞரின் நினைவிடத்திற்கு சென்றோம். அரசியல் கலக்காமல் பெருந்தன்மையோடு செயல்பட்டுள்ளோம். அரசியல் நாகரீகத்தை முழுமையாக உணர்ந்திருக்கும் கட்சியாக பாஜக உள்ளது. சித்தாந்த அடிப்படையில் பாஜகவும், திமுகவும் எதிரும் புதிருமாக பயணம் செய்து கொண்டு வருகிறோம். எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியில் இருக்கும் போது ஒரு பேச்சு, ஆட்சி இல்லாத போது ஒரு பேச்சு என பேசுகிறார்.

திமுக ஆட்சிக்கு வந்த மூன்று ஆண்டுகளில் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் மீது தொடரப்பட்ட வழக்கை விட என் மீது ஐந்து மடங்கு வழக்கு தொடரப்பட்டுள்ளது. கிணற்றுத் தவளை போல எடப்பாடி பழனிச்சாமி பேசிக்கொண்டு உள்ளார். எடப்பாடி பழனிச்சாமி அவர்களுடைய அரசியல் புரிதல் இப்படித்தான் உள்ளது.

ஆளுநருக்கும் முதலமைச்சருக்கும் சமரசம் செய்வது எனது வேலை கிடையாது. 1980இல் இருந்த அரசியல் சூழ்நிலை தற்போது தமிழகத்தில் இல்லை. மக்களுக்கு எங்கள் மீது நம்பிக்கை வரவேண்டும் என்ற முதிர்ந்த கட்சியாக பாஜக உள்ளது. எடப்பாடி பழனிச்சாமி அவர்களிடம் பெட்டர் பொலிடிகல் மெச்சூரிட்டியை எதிர்பார்க்கிறேன். நாளை ஜெயலலிதாவுக்கு இதுபோன்று விழா கொண்டாடும்போது, இதே போன்று இபிஎஸ் செயல்பட முடியுமா?

ரகசிய உறவு இருப்பதாக எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார். பாஜக என்ன தீண்டத்தகாத கட்சியா? எடப்பாடி பழனிசாமி மனதில் எவ்வளவு அழுக்கு உள்ளது. அவரது மனதில் அவ்வளவு ஜாதிய வன்மம் உள்ளது. எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் எதிர்க்கட்சித் தலைவராக இருக்க தகுதியானவரா? முதலமைச்சராக இருந்த ஒருவர் இவ்வாறு பேச முடியுமா?

எம்ஜிஆர்-க்கு இவ்வளவு பெரிய நிகழ்ச்சியை கொண்டாட தவறியது (அதிமுக) நீங்கள் செய்த தவறு. கருணாநிதி நாணய வெளியீட்டு விழாவை, கருணாநிதியின் புகழ் நாடு முழுவதும் பரவ திமுக பயன்படுத்திக் கொண்டார்கள். மாற்று சித்தாந்தத்தில் உள்ள தலைவராக இருந்தாலும், தமிழக மக்களின் நலனுக்காக சேவை செய்தவர்களுக்கு நாங்கள் மரியாதை செலுத்துவோம். தமிழக பாஜக ஜன்னலை திறந்து வைத்துள்ளது. மாற்று சித்தாந்தங்கள் உள்ளே வரட்டும் வெளியே போகட்டும். ஆனால், எங்கள் கால் நிலையாக உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.