போதைப் பொருள் ஒழிப்பு… முதல்வர் ஸ்டாலின் தலைமையில் கல்லூரி மாணவர்கள் உறுதிமொழி ஏற்பு.!!

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் தலைமையில் இன்று (12.8.2024) சென்னைப் பல்கலைக்கழகத்தில் காவல்துறை சார்பில் நடைபெற்ற “போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு” நிகழ்ச்சியில், கல்லூரி மாணவ, மாணவியர்கள் போதைப்பொருட்கள் ஒழிப்பு குறித்த உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர்.

மேலும், மாநிலத்தில் போதைப்பொருள் உற்பத்தி மற்றும் சட்டவிரோதக் கடத்தலை ஒழிப்பதில் சிறப்பாக பணியாற்றிய காவல்துறை அலுவலர்கள் மற்றும் காவல் ஆளிநர்களுக்கு 2024-ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு முதலமைச்சர் காவலர் சிறப்பு பதக்கங்களை வழங்கி கௌரவித்தார்.

2022-ம் ஆண்டு ஆகஸ்ட் 10 அன்று நடைபெற்ற மாநில அளவிலான போதைப்பொருள் ஒழிப்பு மாநாட்டில், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் “போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு” உருவாக்கிட வேண்டும் என இலக்கினை நிர்ணயித்தார். அதற்குத் தேவையான போதைப் பொருட்கள் ஒழிப்பு விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக தமிழ்நாடு காவல்துறை சார்பில் 11.08.2022 அன்று முதலமைச்சர் அவர்கள் தலைமையில் சென்னை, கலைவாணர் அரங்கத்தில் “போதைப்பொருட்கள் இல்லாத தமிழ்நாடு” விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டு உறுதிமொழி ஏற்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து காவல் துறை மூலமாக போதைப் பொருட்களை கண்டறிந்து ஒழித்திட தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. மாநிலமெங்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இவற்றைத் தொடர்ந்து 2023 ஆம் ஆண்டிலும் ஆகஸ்டு 11 அன்று “போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு” விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டு முதலமைச்சர் அவர்கள் தலைமையில் உறுதிமொழி ஏற்கப்பட்டது.

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் நோக்கத்தினை அடைந்திட தமிழ்நாடு காவல்துறை மற்றும் அமலாக்கப் பணியகம், குற்றப் புலனாய்வு துறை ஆகியவை போதைப்பொருட்கள் மற்றும் மனமயக்கப் பொருட்களின் சட்டவிரோத விற்பனை மற்றும் கடத்தலுக்கு எதிராக தொடர்ந்து கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. கடந்த ஆண்டில் இது தொடர்பாக மொத்தம் 10,256 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அவற்றில் 14,770 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து சுமார் 23,364 கிலோ கஞ்சா, 0.953 கிலோ ஹெராயின், 39,910 மாத்திரைகள் மற்றும் 1239 கிலோ மற்ற போதைப்பொருட்கள் (கஞ்சா சாக்லேட், மெத்தாபிடமைன், ஆம்பிடாமைன் மற்றும் மெத்தாகுலான்) கைப்பற்றப்பட்டுள்ளது, நடப்பு 2024 ஆண்டில், ஜூன் மாதம் வரை மொத்தம் 4,522 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 7,123 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன் விளைவாக 11,081 கிலோ கஞ்சா, 74,016 மாத்திரைகள் மற்றும் 283.70 கிலோ மற்ற போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மேலும், போதைப்பொருள் விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபட்டு லாபம் பெற்ற குற்றவாளிகளுக்கு எதிராக நீதி விசாரணை நடத்தப்பட்டு, அவர்களின் அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் சட்ட விதிகளின் கீழ் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றது. கடந்த 11.08.2022 முதல் இதுவரை 76 போதைப்பொருள் வழக்குகளில் சம்மந்தப்பட்ட 154 குற்றவாளிகளுக்கு எதிராக நீதிவிசாரணை மேற்கொள்ளப்பட்டு, அவர்களின் 45 எண்ணிக்கையிலான சுமார் ரூ.18.15 கோடி மதிப்புடைய அசையும் / அசையா சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது. மேலும், போதைப்பொருள் மற்றும் உளவெறி ஊட்டும் பொருட்கள் சட்ட (NDPS) வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகளின் சுமார் 5 இலட்சம் ரூபாய் இருப்பு கொண்ட 8800 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.

கடுமையான சட்ட நடிவடிக்கை மட்டுமல்லாமல், “தேவை குறைப்பு” என்ற இலக்கை அடைவதற்காக, போதைப்பொருள் பழக்கத்திற்கு எதிராக இளைஞர்கள், குறிப்பாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த தமிழ்நாடு அமலாக்கப் பணியகம், குற்றப் புலனாய்வு பிரிவு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் முதன்மைத் திட்டமான ‘Drive Against Drugs’ கீழ் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

கல்வி நிறுவனங்கள், தொழிற்சாலைகள் மற்றும் மக்கள் கூடும் வணிக வளாகங்கள், விளையாட்டுப் போட்டிகள் நடைபெறும் இடங்கள், திருவிழாக்கள் ஆகிய இடங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றது. கடந்த 2023 ஆம் ஆண்டில், சுமார் 30 லட்சம் மக்கள் கலந்து கொண்ட மொத்தம் 1,10,603 விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன. நடப்பு ஆண்டில் 2024 ஜூன் வரை, சுமார் 8.20 லட்சம் பொதுமக்கள் கலந்து கொண்ட சுமார் 23,350 விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன.

முதலமைச்சர் அவர்கள் தலைமையில் போதைப்பொருள் ஒழிப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது. போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக, தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் தொழில்முறை கல்லூரிகளில் மாணவ, மாணவியருக்கு போதைப்பொருள் எதிர்ப்பு உறுதிமொழி நடத்த திட்டமிடப்பட்டது, அதன்படி, சென்னைப் பல்கலைக்கழக வளாகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையில், இன்றைய தினம் போதைப்பொருள் ஒழிப்பு உறுதிமொழியினை சுமார் 1500 கல்லூரி மாணவ, மாணவியர்கள் ஏற்றுக் கொண்டனர்.

கடந்த மே, 2022 ஆம் ஆண்டு முதல் ஜுன் 2024 வரை மாநிலம் முழுவதும் 266 மாவட்ட அளவிலான NARCO ஒருங்கிணைப்பு கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளது. மேலும், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைப்படி, மாநிலம் முழுவதும் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க காவல்துறை, உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை அதிகாரிகள் உள்ளடக்கிய 391 குழுக்கள் கடந்த நவம்பர் 2023 இல் உருவாக்கப்பட்டு தீவிர சோதனைகள் மேற்கொள்ளப்பட்டதில், கடந்த ஜுலை 2024 வரையில், 19,332 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு சுமார் 177 டன் புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேற்படி குற்றவாளிகளிடமிருந்து சுமார் 13.16 கோடி ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டதுடன் 8,650 கடைகள் சீல் வைக்கப்பட்டுள்ளது.

மாநிலத்தில் போதைப்பொருள் உற்பத்தி மற்றும் சட்டவிரோத கடத்தலை ஒழிப்பதில் சிறப்பான பணியாற்றியதற்காக 2024 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு முதலமைச்சர் காவலர் சிறப்பு பதக்கங்களை, தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஆர். சிவபிரசாத், இ.கா.ப., அவர்களுக்கும், சேலம், மத்திய புலனாய்வுப் பிரிவு, காவல் ஆய்வாளர் திரு.பி. ஜகன்னாதன் அவர்களுக்கும், சென்னை, மத்திய புலனாய்வுப் பிரிவு, சார்-ஆய்வாளர் திரு. கே. ராஜ்குமார் அவர்களுக்கும், மதுரை மாவட்டம், ஒத்தக்கடை போக்குவரத்து காவல் நிலைய சிறப்பு சார்-ஆய்வாளர் திரு. ஆர். அருண் அவர்களுக்கும், இராமநாதபுரம் மாவட்டம், ஆர்.எஸ். மங்கலம் காவல் நிலைய முதுநிலை காவலர் திரு. ஆர். துரை அவர்களுக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வழங்கி சிறப்பித்தார்.

மேலும் இன்று மாநிலம் முழுவதும் கைப்பற்றப்பட்ட சுமார் 13,775 கிலோ போதைப்பொருட்கள் மற்றும் மனமயக்கப் பொருட்கள் செங்கல்பட்டு, சேலம், தஞ்சை மற்றும் திருநெல்வேலி ஆகிய இடங்களில் தகுந்த பாதுகாப்புடன் எரித்து அழிக்கப்பட்டது.இந்நிகழ்ச்சியில், நாடாளுமன்ற உறுப்பினர் திரு. தயாநிதி மாறன், தலைமைச் செயலாளர் திரு. சிவ் தாஸ் மீனா, இ.ஆ.ப., உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் திரு. தீரஜ் குமார், இ.ஆ.ப., காவல்துறை தலைமை இயக்குநர் திரு. சங்கர் ஜிவால், இ.கா.ப., காவல்துறை கூடுதல் இயக்குநர் (சட்டம் மற்றும் ஒழுங்கு) திரு. சௌ. டேவிட்சன் தேவாசிர்வாதம், இ.கா.ப., சென்னை பெருநகர காவல் ஆணையர் திரு. ஆ. அருண், இ.கா.ப., அமலாக்கப் பணியகம் – குற்றப் புலனாய்வுத் துறை கூடுதல் இயக்குநர் முனைவர் அ. அமல்ராஜ், இ.கா.ப., மற்றும் காவல்துறை உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.