அதிமுகவில் ஐக்கியமாகும் மாஜி அமைச்சர்கள் கு. ப.கிருஷ்ணன், வைத்திலிங்கம்..!

முன்னாள் அதிமுக அமைச்சர் கு.ப. கிருஷ்ணன் நேற்று திருச்சியில் அவரது இல்லத்தில் செய்தியாளரிடம் கூறும்போது முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் அண்ணா திமுக உரிமை மீட்பு குழு ஒன்றை உருவாக்கினார். அதில் முன்னாள் அமைச்சர்களான வைத்திலிங்கம் வெல்லமண்டி நடராஜன் கு.ப.கிருஷ்ணன் ஆகியோர் அவருடன் கைகோர்த்ததோடு தொடர்ந்து இபிஎஸ்சுக்கு எதிராக பணியாற்றினர். இந்நிலையில் ஓபிஎஸ் பாஜகவில் கூட்டணி வைத்தது தன்னை நம்பி வந்தவர்களை பற்றி அவர் எதுவும் கண்டு கொள்ளாமல் விட்டதால் அவர்களுக்கு பெரும் ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியது.
இந்நிலையில் ராமநாதபுரம் தொகுதியில் பாஜ கூட்டணியில் சுயேச்சையாக போட்டியிட்டு ஓபிஎஸ் தோல்வியை சந்தித்தார்.
ஆதரவாளர்களாக இருந்தவர்களில் ஒருசிலர் அமைதியாக அந்த அணியில் இருந்து வௌியேறிய நிலையில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் வைத்திலிங்கத்தின் வீட்டிற்கு நேரில் சென்று எடப்பாடி அணிக்கு வரும்படி அழைப்பு விடுத்தார் தேர்தலுக்கு பிறகு பதில் அளிப்பதாக அவர் தெரிவித்திருந்தார். தற்போது அவரும் எடப்பாடி அணிக்கு வர உள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல் முன்னாள் அமைச்சரான கு.ப.கிருஷ்ணன் ஓபிஎஸ்சின் அணியில் இருந்த நிலையில், கடந்த மாதம் திருச்சியில் நடந்த முத்தரையர் சதயவிழாவில் அவருடைய சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்வதற்காக ஓபிஎஸ் வந்தபோது, அவருடன் வருவதை தவிர்த்து, தனியாக வந்து மாலை அணிவித்து சென்றார். ஓபிஎஸ் அணியில் இருந்து அவர் வெளியேற உள்ளதாக அப்போதே பேசப்பட்டது. இந்நிலையில் திருச்சி குழுமணி பகுதியில் உள்ள தனது வீட்டில்முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன் மாதத்துக்கு முன்பே ஓபிஎஸ் அணியில் இருந்து விலகிவிட்டதாக தெரிவித்தார்.
செய்தியாளர்களிடம் கூறியதாவது தேர்தல் முடிவு ஒரு வழியை காட்டியிருக்கிறது. எல்லோரும் ஒட்டுமொத்தமாக இணைவதற்கான காலம் விரைவில் கனிந்துவிடும். அது நடக்கும் என்று நம்புகிறேன். பாஜவுடன் கூட்டணி வைத்த ஜெயலலிதா நான் செய்த தவறை இனி ஒருபோதும் வாழ்நாளில் செய்யமாட்டேன் என்று சொன்னார். அதிமுகவின் கொள்கையே எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் சொன்னது தான். கட்சியில் தலைமை இல்லை என்றால் கட்சி உருப்படாமல் போய்விடும். நாளைக்கு விக்கரவாண்டி இடைத்தேர்தல் வருகிறது. தலைமை இல்லாமல் எப்படி தேர்தலை சந்திக்க முடியும். இருக்கிற தலைமை இருக்கட்டும், தொண்டர்கள் முதலில் ஒன்று சேருங்கள்.
ஏழு இடத்தில் டெபாசிட் போய்விட்டது என்று செய்தித்தாள்களில் வருகிறதே. இதை பார்த்து நாங்கள் மிகவும் மனம் நொந்து போயிருக்கிறோம் அண்ணா திமுக உரிமை மீட்பு குழுவுக்கும், பாஜவுடன் கூட்டணி வைத்த ஓபிஎஸ்சுக்கும் சம்மந்தம் இல்லை என்று மாதங்களுக்கு முன்பே சொல்லிவிட்டேன். சிக்கல் தீர்ப்பு குழுவை எடப்பாடி அமைக்கட்டும், ஒரு குழு அமைத்து ஊருஊரா போக சொல்லுங்கள். இப்பவும் நாங்கள் எடப்பாடியை ஏற்றுக்கொண்டு தான் இருக்கிறோம். ஓபிஎஸ் உடன் தான் நான் இருந்தேன் சில நடவடிக்கைகள் எனக்கு பிடிக்கவில்லை. இனி ஒன்றுமே தேராது என்று தோன்றியது அதனால் நான் வௌியே வந்துவிட்டேன்.
டிடிவி. தினகரன் அமுமுக என்ற தனிக்கட்சி ஆரம்பித்துசென்றுவிட்டார். அவர் ஏதோ செய்து கொண்டிருக்கட்டும். சசிகலா கடந்த ஒன்றரை ஆண்டுகளாக அறிக்கை விட்டுக் கொண்டிருப்பதை தவிர இணைப்பு முயற்சிக்கு வேறு என்ன நடவடிக்கை எடுத்தார் இபிஎஸ், ஓபிஎஸ் என்ற இருவரையும் அவர் தான் முதலமைச்சர் ஆக்கினார். யாரையும் அவர் அழைக்கவில்லை கட்சி நிர்வாகிகளை வரவழைத்து அனைவரையும் ஒன்றிணைக்க வேண்டும் என்று சொல்லி அறிக்கை மட்டும் விட்டு கொண்டிருக்கிறார்.இவ்வாறு அவர் கூறினார். எடப்பாடியை கட்சியின் பொதுச் செயலாளராக ஏற்றுக்கொண்டு தான் இருக்கிறோம் என்று கூறி உள்ளதால் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி முன்னிலையில் தன்னை அதிமுகவில் இணைத்துக் கொள்வார் என்று அதிமுக நிர்வாகிகள் தெரிவித்தனர்.