ஜம்மு – காஷ்மீரில் துப்பாக்கிச்சூடு:பயங்கரவாதியின் ஓவியத்தை வெளியிட்ட போலீஸ் … துப்பு கொடுத்தால் ரூ.20 லட்சம் பரிசு..!

ரியாசியில் நடந்த தீவிரவாத தாக்குதல் தொடர்பாக, பயங்கரவாதியின் ஓவியத்தை போலீஸார் வெளியிட்டுள்ளனர். அவரைப் பற்றி துப்பு கொடுப்பவருக்கு ரூ.20 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று ஜம்மு காஷ்மீர் போலீஸார் அறிவித்துள்ளனர்.

ஜம்மு – காஷ்மீரின் ரியாசியிலிருந்து கடந்த 9-ம் தேதி மாலை மாதா வைஷ்ணவி தேவி கோயிலுக்கு ஒரு பேருந்தில் ஏராளமான பக்தர்கள் சென்று கொண்டிருந்தனர். ஷிவ் கோரி கோயிலில் இருந்து கத்ராவுக்குச் செல்லும் பேருந்து ரஜோர மாவட்டத்தின் எல்லையான ரியாசி மாவட்டத்தின் பூனி பகுதியை அடைந்த போது இந்தப் பேருந்து மீது பயங்கரவாதிகள் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினர்.பயங்கரவாதிகள் சுட்டதால் விபத்தில் சிக்கிய பேருந்து

இதில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது. இதில் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உள்பட 10 பேர் உயிரிழந்தனர். மேலும் 41 பேர் படுகாயமடைந்தனர். இந்த தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளைக் கண்டுபிடிக்க 11 பாதுகாப்புப் படையினர் கொண்ட குழுக்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளன.போலீஸ் வெளியிட்டுள்ள பயங்கரவாதியின் புகைப்படம்

அத்துடன் இந்த தாக்குதலில் மூன்று பயங்கரவாதிகள் ஈடுபட்டதை போலீஸார் உறுதிப்படுத்தியுள்ளனர். இந்த நிலையில் தாக்குதல் நடந்த இரண்டு நாட்களுக்குப் பின் தாக்குதலில் ஈடுபட்ட மூன்று பயங்கரவாதிகளின் ஒருவரின் ஓவியத்தை ஜம்மு காஷ்மீர் போலீஸார் இன்று வெளியிட்டுள்ளனர்.

நேரில் கண்ட சாட்சிகள் அளித்த விளக்கத்தின் அடிப்படையில் பயங்கரவாதியின் ஓவியம் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த பயங்கரவாதி குறித்து துப்புக் கொடுத்தால் ரூ.20 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று ஜம்மு காஷ்மீர் போலீஸார் அறிவித்துள்ளனர்.