இந்தியாவின் முதல் முறையாக… வந்தாச்சு அரிசி வழங்கும் ஏடிஎம்..!!

இந்தியாவின் முதல் 24 மணிநேர அரிசி ஏடிஎம் ஒடிசாவின் புவனேஸ்வரத்தில் உள்ள மஞ்சேஸ்வரில் வியாழக்கிழமை திறக்கப்பட்டது.

மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் அரிசி வழங்கும் ஏடிஎம்கள் தொடங்கப்படும் என்று அமைச்சர் பத்ரா கூறினார்.

இந்தியாவில் உலக உணவுத் திட்டத்தின் துணை இயக்குநர் நோசோமி ஹாஷிமோடோ முன்னிலையில் ஒடிசா உணவு வழங்கல் மற்றும் நுகர்வோர் நலத்துறை அமைச்சர் கிருஷ்ண சந்திர பத்ரா, 24 மணி நேர அரிசி வழங்கும் ஏடிஎம் இயந்திரத்தை வியாழக்கிழமை திறந்து வைத்தார்.

பின்னர் அவர் செய்தியாளர்களுடன் பேசியதாவது:

“இன்று ஒரு வரலாற்று நாள். குடும்ப அட்டைத்தாரர்கள் அரிசி வழங்கும் ஏடிஎம் இயந்திரத்தில் தங்களது குடும்ப அட்டை அல்லது ஆதார் கார்டு

எண்ணை பதிவிட்டு அவர்களுக்கான 25 கிலோ அரிசியை பெற்றுச் செல்லலாம். இனி நீண்ட நேரம் நியாய விலை கடைக்கு முன்பு வரிசையில் மக்கள் காத்திருக்க வேண்டிய அவசியம் இருக்காது. இதன் மூலம் மத்திய அரசு வழங்கும் மானிய அரிசியின் திருட்டை கணிசமாக குறைக்க முடியும். இந்த முறை மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் தொடங்கப்படும்” என்று பத்ரா கூறினார்.

மேலும் அரிசி ஏடிஎம் தொடங்கப்பட்டதன் மூலம், குடும்ப அட்டை பயனாளிகளுக்கு அவர்களுக்கான உணவுப் பொருள்களை வழங்குவதில் ஏற்படும் தாமதங்கள் குறைக்கப்படுகிறது.

பயனாளிகளுக்கு, சரியான எடையில் அரிசி வழங்கப்படுவதை உறுதி செய்வதே இந்த திட்டத்தின் குறிக்கோள். அரிசி வழங்கும் ஏடிஎம் இயந்திரத்தில் இருந்து அரிசி பெறுவதற்கான செயல்முறை மிகவும் எளிதானது. பல்வேறு பரிசோதனைகளுக்கு பிறகு திறக்கப்பட்டுள்ள இந்தியாவின் முதல் அரிசி ஏடிஎம். இதனை ஒடிசாவின் அனைத்து மாவட்டங்களில் விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளோம்.

மாநிலத்தில் ஊட்டச்சத்து பாதுகாப்பை அடைவதற்காக உலக உணவு திட்டத்துடன் இணைந்து ஒடிசா அரசு இந்த முயற்சியை தொடங்கியுள்ளது என்று அமைச்சர் பத்ரா கூறினார்.

இந்தியாவில் உள்ள உலக உணவுத் திட்டம், ஏடிஎம் இயந்திரம் மூலம் அரிசி,கோதுமை 24 மணி நேரமும் விநியோகிக்கப்படும் என்று கூறியுள்ளது. அரிசி ஏடிஎம் மூலம் ஐந்து நிமிடங்களில் 50 கிலோ வரை வழங்க முடியும். ஒரு மணி நேரத்திற்கு 0.6 வாட்ஸ் மட்டுமே பயன்படுத்துகிறது மற்றும் தானியங்கு நிரப்புதலுக்காக சோலார் பேனல்களுடனும் இணைக்க முடியும். 24 மணி நேரமும் செயல்படுத்தப்படுவதால் காத்திருப்புக்கான நேரம் 70 சதவீதம் குறைவதாக கூறப்பட்டுள்ளது.