இந்தோனேசியாவில் வெள்ளம் பெருக்கு – 13 பேர் உயிரிழப்பு..

ந்தோனேசியாவில் ஏற்பட்ட பயங்கர வெள்ளம் மற்றும் நிலச்சரிவைத் தொடர்ந்து 13 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 6 பேரைக் காணவில்லை எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தோனேசியாவின் கிழக்குப் பகுதியில் உள்ள வடக்கு மாலுகு மாகாணத்தில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் பல வீடுகளும், கட்டடங்களும் இடிந்து சேதமாகியுள்ளன. நேற்று இரவு 13 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து 6 பேரைக் காணவில்லை. கடந்த சனிக்கிழமை (ஆகஸ்ட் 24) முதல் பெய்துவரும் கனமழையால் டெர்னேட் பகுதியில் திடீர் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளது. வடக்கு மாலுகு மாகாணத்தின் ருவா கிராமத்திற்குச் செல்லும் முக்கிய சாலை துண்டிக்கப்பட்டு, பல வீடுகள் மற்றும் கட்டடங்கள் மண்ணில் புதைந்துள்ளன. மீட்கப்பட்ட மக்களுக்கு அங்குள்ள உள்ளூர் மருத்துவமனைகளில் சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. இருள் காரணமாக நேற்று இரவு மீட்புப் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டதைத் தொடர்ந்து இன்று காலை மீண்டும் பணிகள் தொடங்குமென்று மீட்புப் படைத் தலைவர் ஃபதுர் ரகுமான் தெரிவித்துள்ளார். மேலும், பலரும் காணாமல் போயிருக்கலாம் என்றும், பாதிக்கப்பட்ட மக்கள் தரும் தகவல்களைப் பொறுத்து மேலும் மீட்புப் பணிகள் தொடரப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். போலீசார், உள்ளூர் மீட்புப் பணியாளர்கள் மற்றும் பல்வேறு நிறுவனங்களின் தன்னார்வலர்கள் என சுமார் 1,000 பேர் தேடுதல் மற்றும் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். வரும் நாட்களில் மேலும் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரித்துள்ளது. எனவே, அங்குள்ள மக்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றது.