தமிழகத்தில் போக்குவரத்து ஊழியர்கள் 6 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி 10க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பயணிகள் கடும் அவதிப்பட்டனர். பேச்சுவார்த்தையில் உடன்படிக்கை ஏற்படவில்லை. அதன் பிறகு சென்னை உயர் நீதிமன்றத்தின் அறிவுரையின்படி பொங்கல் பண்டிகைக்கு பேருந்துகள் இயக்கவேண்டும் எனவும் போராட்டத்தை கைவிடவேண்டும் எனவும் வலியுறுத்தியது. இதன் அடிப்படையில் தற்காலிகமாக ஒத்தி வைத்துள்ளனர். இந்நிலையில் போக்குவரத்துக்கு ஊழியர்களுக்கான ஊக்கத்தொகையை தமிழக அரசு அறிவித்துள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்;- பொங்கல் திருநாளை முன்னிட்டு 112675 போக்குவரத்துக் கழகப் பணியாளர்களுக்கு சாதனை ஊக்கத்தொகை வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சிறப்பான மற்றும் திறமையான போக்குவரத்து சேவையை பொதுமக்களுக்கு அளிப்பதில் தமிழக அரசு போக்குவரத்துக் கழகங்கள் முக்கிய பங்காற்றுகின்றன. இந்தியாவிலேயே தமிழகத்தில் இயங்கும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்கள் தான் பயணிகள் அடர்வு, பேருந்து பயன்பாடு, எரிபொருள் செயல்திறன் உயர்ந்துள்ளது. குக்கிராமம் முதல் மாநகரங்கள் உட்பட மக்கள் குடியிருக்கும் அனைத்துப் பகுதிகளுக்கும் தங்குதடையின்றி, போக்குவரத்து சேவை அளிக்கப்பட்டு வருகின்றது. தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகங்கள், தமிழக போக்குவரத்து வளர்ச்சி நிதி நிறுவனம், பல்லவன் போக்குவரத்து அறிவுரைப் பணிக்குழு என அனைத்து நிறுவனங்களிலும் தற்போது சுமார் 1லட்சம் பேர் பணிபுரிந்து வருகின்றார்கள்.
பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகங்கள். தமிழ்நாடு போக்குவரத்து வளர்ச்சி நிதி நிறுவனம். பல்லவன் போக்குவரத்து அறிவுரைப் பணிக்குழு ஆகியவற்றில் பணிபுரியும், பணியாளர்களில், 2023ம் ஆண்டில் 91 நாட்கள் மற்றும் அதற்கு மேலும், ஆனால் 151 நாட்களுக்கும் குறைவாக பணிபுரிந்த ஊழியர்களுக்கு ரூ85 வீதமும்; 151 நாட்கள் மற்றும் அதற்கு மேலும் ஆனால் 200 நாட்களுக்கும் குறைவாக பணிபுரிந்த ஊழியர்களுக்கு ரூ195 வீதமும், 200 நாட்கள் மற்றும் அதற்கு மேலும் பணிபுரிந்த ஊழியர்களுக்கு ரூ625 வீதமும் பொங்கல் “சாதனை ஊக்கத் தொகை” வழங்கப்படும். இந்த உத்தரவின்படி, அனைத்து அரசு போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு சாதனை ஊக்கத்தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.